Thursday, May 14, 2015

சற்குரு - தாத்தா - 2

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியைப் பாடுவது போல் எங்கு தொடங்குவது என்று திகைக்கிறது மனது.

நடை பயின்ற வயது நினைவிது - செல்வ நிலையத்தின் வாசல் மிதியடிக்குக் கீழே பதிந்த வெண்சங்கை வருடிக் கொண்டே இருக்கத் தூண்டும் வழவழப்பு, தரையின் முகம் காட்டும் பளபளப்பு, தாத்தா அமர்ந்த வெதுவெதுப்போடு இருக்கும் மரசிம்மாசனம். அந்த நாற்காலி தாத்தா மறைவுக்குப் பின் உயரம் குறைந்து விட்டதென்றே தோன்றும். அதில் அமர்ந்து கொண்டு தன் இரு பாதங்களிலும் ஏற்றி நிற்க வைத்து, 'ஏல பாண்டியா' என ஏற்றி இறக்கும் சந்தோஷம். காதை இழுத்து காது கத்துகிறது என விளையாடும் விளையாட்டு.. குழந்தையின் கனவில் தெய்வம் வருமெனக் கேட்டிருக்கிறோம். குழந்தைகளிடம் தாத்தாக்கள் உருவில் நேரில் வருமென நாமே உணர்ந்திருக்கிறோம்.

இடையறாது பேசும் வயதின், நினைவுகள் ஏராளம். அறிந்ததனைத்தும் அவர் அறிவித்ததெனும் போது எதை எழுதுவது, எதை விடுவது.K.B.சுந்தரம்பாள் போல என்ன என்ன என இடையறாத கேள்விகள். "தாத்தா, உங்கள் நெற்றியில் ஏன் மூன்று கோடுகள், அணிலுக்கு ராமர் போட்டது போல் யார் போட்டது உங்களுக்கு?" எனக் கேட்டதற்கு, சிரித்துவிட்டு "20 வயதிற்கு ஒன்று என கோடு வரும், 60 வயதுக்கு மேலாகிவிட்டது எனக்கு. அதனால் 3 கோடுகள்" என்று தாத்தா சொன்னதும் நமக்கு எப்போது 20 வயதாகி முதல் கோடு விழும் என ஆசையாயிருந்தது. குழிந்திருக்கும் தோள்பட்டையைப் பார்த்துத் திகைத்து "ஐயோ பள்ளம் விழுந்திருக்கே! எனக்கெல்லாம் இல்லையே? ஏன் குழி விழுந்தது?" என்றதற்கு "உன்ன மாதிரி நிறைய சின்னப் பிள்ளைகள் தோளில் ஆடினதால் குழி விழுந்தது" என்றதும், "உங்க கை எல்லாம் அணில் மாதிரி ரொம்ப softஆ இருக்கே, பஞ்சுத் தாத்தா" எனக் கொஞ்சியதற்கு, முதுகில் சாய்த்துக்கொண்டு "பெத்தாரு பெத்தாரு பேரு வைக்க வந்தாரு" எனப் பாடியதன் பொருள் அப்போது புரியவில்லை..

அந்த வயது நினைவாக பாட்டியும்(தாத்தாவின் அம்மா) பாட்டியின் மென்மையான, பச்சை குத்திய கைகளும் நினைவு வருகிறது. செல்வநிலையத்தின் பின்னால் நின்ற வேம்பும், அதில் கட்டியிருந்த தேன்கூடும், அம்மரத்தில் வழிந்த பிசினைத் தொட்டுக்கொண்டே பின்னால் விறகடுப்பில் பாட்டி போட்டிருந்த வெந்நீரைப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவு வருகிறது.

லா.ச.ரா சொல்வது போல் "எதுவுமே மறப்பதில்லை; எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பாத்திருப்பவையே"

கொஞ்சல் மட்டுமல்ல,  அதட்டலும், அடிப்பதாக தாத்தா விசிறியைத் தூக்கியதுமான சம்பவங்களும் உண்டு. (நான்தான் பல காரணங்கள் கொடுப்பது வழக்கமாயிற்றே - சாப்பிடாமல் படுத்துவது, எதற்காவது 'மக்குக் கழுதை' எனப்பெயர் பெற பிடிவாதம் பிடிப்பதென) அடிக்க வந்தாலும், 'தாத்தா' என அழுது தாத்தா கால்களையே கட்டிக்கொள்வது என் வழக்கமாம். பிறகு எங்கு அடிப்பது. இதை அம்மா நினைவு கூறும் போதெல்லாம் தோன்றுவது:

தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ??

முந்தைய பதிவு (1) 

அடுத்த பதிவு(3)

No comments:

Post a Comment