Saturday, June 27, 2015

சற்குரு - தாத்தா - 11

சற்குரு - தாத்தா - 11

அடுத்த களம் - காற்றில் உப்பு மணக்கும் தூத்துக்குடி. ஆறாம் வகுப்பை அங்கே தொடர்வதென பேச்சு. அப்பா அஸ்ஸாம் வேண்டாமென்று, அலுவலகத்தில் மேல்மட்டத்தின் கீழ்மட்டங்கள் பொறுக்காமல், regional manager பதவியைத் துறந்து 30+ வருட அனுபவத்துடன் சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் PNB கிளை மேலாளராய்,  பதவியேற்பு. வீடு தூத்துக்குடியில். அந்த நாட்களில் அது ஒரு பங்களா. 26கிமீ அன்றாட பயணம் தூத்துக்குடியிலிருந்து - இன்று மிக எளிதாய்த் தோன்றும் இந்தத் தொலைவு, அன்று வெளியூர் பேருந்தில் ஒன்றரை மணி நேரப் பயணம். வீடுகளின் பின்புறம் private jacuzzi போல் தாமிரபரணி ஓடும் தோட்டங்கள் இருகரையிலும் கொண்ட ஆத்தூர் தாண்டியதும் வரும் இந்த சிற்றூர்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி தாத்தாவுடன் பஸ் பயணம். எப்போது வரும் தூத்துக்குடி என அருப்புக்கோட்டை தாண்டியதுமே என் கேள்விகள். ஏறத்தாழ 100கிமீ இதே கேள்வியுடன் எப்படிப் போவது. எனவே 200மீட்டருக்கு ஒரு முறை வரும் 2, 4, 6, 8 என இலக்கமிட்ட கற்களைக் காட்டி இது ஏறக்குறைய ஒரு ஃபர்லாங்குக்கு ஒரு முறை வரும்.  இது ஒரு முறை முடிந்தால் 1 கிமீ என சொல்லிக் கொடுத்தார்கள். பின்னாளில் பழனி பாதயாத்திரையின் போது மட்டும் இந்தக் கற்களை யாரோ 1மைல்-க்கு ஒன்றாய் வைத்திருப்பதாய்த் தோன்றும். இன்றும் இதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு ஒரு தியானமாய் பஸ்ஸில் பயணம் செய்வது சுகம்.

தூத்துக்குடி Holycross entrance exam - தாத்தா வழக்கமாய் கேட்பதினும் எளிய கேள்விகளே. Admission கிடைத்து பள்ளி தொடங்கி ஒரு வாரத்தில் அப்பா அலுவலகம் அருகே ஆறுமுகநேரிக்கே வீடு மாற்றம் என முடிவாகியது. எனவே மீண்டும் புதிய வீடு, புதிய பள்ளி, புதிய நண்பர்கள். ஆறாம் வகுப்பு - ஏழாவது பள்ளி.

உப்பளங்கள் - அலை அலையாய் மலை மலையாய் கண்ணுக்கெட்டியவரை. வெண்மை தோய் கரிப்பு மணிகளிடையே கரிய மனிதர்கள். ஊர் புதிது, சொல் புதிது. 'ஏல வயிறு பசிக்கு, அங்க என்ன செய்யுதே! ' என்று ஏச்சைப் போல் தொனிக்கும் தூத்துக்குடிப் பேச்சும், 'அவிய வரட்டும் பாத்துக்கிடுதேன், நீ இஞ்ச இரி' என்ற நாஞ்சில் தமிழுக்கும் கலப்பு மணம் அங்கு ஆறுமுகநேரி பகுதியில் உலவிய தமிழ். நேசமணி, கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகப் பயணங்கள் - தாத்தாவுடன்.

இங்கே தாத்தாவுடனான நேரங்கள் - இன்னும் உன்னதமாய், உரையாடல்கள் - இன்னும் தீவிரமாய். பின்னாளில் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை என்ற உத்வேகம் போலும்.

கால்கள் புதையும் மணல்வெளி. நாற்புறத்திலும் நாளெல்லாம் சலசலக்கும் பனைமரங்கள். தாரங்கதாரா ஊழியர்கள் நிலம் வாங்கிக் கட்டிய பன்னிரண்டே வீடுகள் கொண்ட காலனி. இருபுறமும் ஒரு கிமீ செல்ல வேண்டும் - ஒரு தேங்காய்ச்சில் வாங்குவதற்கும் (அதற்குதான் அதிகம் சென்றிருக்கிறேன்) அம்மாவின் உழைப்பில் மணல் நான்கைந்து மாதங்களில் பசுமை போர்த்தியது.

மொட்டை மாடியில் அனுதினம் தியானம் . அலைபாயத் தொடங்கும் வயதின் மனது, கடிவாளம் சற்குரு கைகளில். விழிமூடி பார்வையைத் திறந்து வைக்கவும், பேச்சைக் குறைத்து மூச்சை அடக்கவும் பயிற்சி. சக்கரங்களும் அதன் விளக்கங்களும், இரு பெரும் நாடிகள் குறித்தும்,  ஓஜஸ் குறித்தும், அனுதினம், அன்றாடம், அருகிருந்த நாட்களில் எல்லாம் பாடம், தீட்சை. கூர் தீட்டப்படும் போது அம்புக்குத் தெரிவதில்லை அதன் இலக்கு. பின்னாளில் வாழ்க்கை நமைப் பின்னோக்கி இழுக்கும் தருணங்களில் முன்னோக்கி சீறி எழும் விசை உந்தித் தள்ள,  கூர்முனை தப்பாது சென்றடையும் அதன் இலக்கு. அன்று இடப்பட்ட வீரியமான விதைகள் இன்றளவும் குருவின் அருள் மழை படும் தோறும் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன. புரியா வயதில் கிடைக்கும் புதையலைத் தொலைத்து விடாதிருக்க பல மனப் பயிற்சிகள். To register, recall and recollect at appropriate time. மனித மனதிற்கு அந்தத் திறன் உண்டு; அதனை மேம்படுத்திக் கொள்வதும், கண்டு கொள்ளாது இழப்பதும் நம் கைகளில். ஒரு தலை சிறந்த வீரனுக்கு, 'உனக்குக் கிடைத்த அதி உன்னதமான ஞானம் தேவையான தருணத்தில் மறந்து போகும்' என்ற குரு சாபத்தினும் வலிய பிரம்மாஸ்திரம் ஏதுமில்லை கர்ணனை வீழ்த்தியது.

குருவருள் இருப்பின் திருவருள் சேரும்.

-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (10)

அடுத்த பதிவு (12)


No comments:

Post a Comment