Tuesday, June 9, 2015

சற்குரு - தாத்தா - 8

சற்குரு - தாத்தா - 8
இனிதே தொடர்ந்தது செல்வநிலைய வாசம். ஐந்தாம் வகுப்பின் மீதமிருந்த மூன்று மாதங்கள் தெரு முனையில் உள்ள தூய அந்திரேயா சர்ச் பள்ளியில். உண்மையில் கல்வியென்னவோ குருகுலவாசமாய் வீட்டில் தாத்தாவிடம்தான். தாத்தாவின் பார்வையில், பாடப்புத்தகத்தில் உள்ளதைப் படிப்பது கல்வியே அல்ல. அது ஒரு outline, பாடத்திட்டத்தின் உருவெளிக்கோடு. உண்மையான பாடம், புத்தகங்களுக்கு வெளியே, அன்றாட வாழ்விலும், பரந்த புறவுலகின் நிகழ்வுகளிலிருந்துமே பெறப்படுகிறது.

இன்னும் சிறு வகுப்பிலேயே(2ஆம் வகுப்பில்), தாத்தாவிடம் படிக்கிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, பாடங்களைத் தாண்டி parts of speech, phonetics என்று என்னென்னவோ தாத்தாவிடம் படித்து விட்டு, வகுப்பின் பாடங்களை எழுதவோ revise செய்யவோ இல்லாதது கண்டு அம்மாவுக்கு ஒரே கலக்கம். தாத்தா ஊருக்குச் சென்ற பின் அம்மா களமிறங்கி என்னைத் தேர்வுக்குத் தயார் செய்தார்கள். தாத்தா எப்போதும் ஆயத்தம் செய்தது வாழ்க்கைக்கான கல்விக்கு. Scienceஇல் evaporation குறித்த பாடம், அதைப் பற்றி விஸ்தாரமாக விளக்கிவிட்டு, phonetics நடத்தினார்கள் தாத்தா. e-va-po-ra-tion 5 syllable word, இப்படி அந்த வயதுக்குக் கடினமான ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து எத்தனை syllable என்று சொல்வது, அந்த வார்த்தைக்கு எவ்விடத்தில் stress and pause போன்ற பாடம்.

அது போல மூன்றாம் வகுப்பில் fractions பள்ளியில் தொடங்கிய புதிதில் "1/6 என்றால் என்ன அர்த்தம், என்ன புரிந்தது உனக்கு?" என்று தாத்தா வினவ, நான் கிளிப்பிள்ளை போல பள்ளியில் சொல்லிக் கொடுத்ததைச் சொன்னேன். 1 is numerator, 6 is denominator என்று. அப்படி என்றால், என்று மேலும் கேட்க ஒரே குழப்பம். 'ஒரு முழுமையை 6 பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு பகுதி' என்றெல்லாம் தாத்தா விளக்க ஒன்றுமே புரியவில்லை. கணிதத்தில் மட்டும் இப்படி எல்லாம் புரியாது விழித்தால் பொறுமை இழந்து விடுவார்கள் தாத்தா. தாத்தா, அப்பா இருவருமே இதில் ஒன்றுதான். கணிதம் அவர்களுக்குப் புரியும் வேகத்தில் நமக்குப் புரியவில்லை என்றால், இதில் புரியாமல் இருக்க என்ன இருக்கிறது என்ற கோபம் வந்துவிடும். குரலை உயர்த்தி தாத்தா "என்ன புரியல உனக்கு?" என்று கேட்டதும் எனக்கு மொத்தமாய் ஒன்றுமே புரியாதது போலிருந்தது. பிறகு மீண்டும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு பல உதாரணங்கள் கொடுத்து புரிய வைத்தார்கள்.

ஐந்தாம் வகுப்பின் பாடத்திட்டத்தில் scriptures என்ற பைபிள் பாடங்கள் இருந்தன. அதுவரை எனக்கு கிறித்தவ வரலாற்றில் அறிமுகம் இல்லை. தாத்தா அதுவரை கற்பித்ததெல்லாம் ஆங்கிலமும், அறிவியலும், கணிதமும், தாத்தாவுக்கு மிகவும் பிடித்தமான சமூக அறிவியலும்தான். பைபிள் மிகவும் போரடிக்கிறது என்று நான் கூறியதும், அதிலும் தொடங்கியது தாத்தாவின் தீட்சை.

Sermon on the Mount என்ற மலைப்பிரசங்கம் பகுதியை மிகவும் அருமையாக விவரித்தார்கள். பொதுவாய் பிரபலமான "ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு", "வருத்தப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்" எல்லாம் இந்த மத்தேயு அதிகாரத்தில்தான் வரும். வீரமாமுனிவர் (இவரது இயற்பெயர் Constantine Joesph Beschi இத்தாலியர்) போன்றோர், ஐரோப்பா விட்டு புதிய நிலங்களில் கால்பதித்து, இங்குள்ள மொழியையும் கற்று, வேதாகமங்களை மொழிபெயர்ப்பும் செய்ய முனைந்தது ஒரு பிரம்மப் பிரயத்தனமே. "Taste and see that Lord is good" ஐ மொழி'பெயர்த்து' "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்" என்றெல்லாம் ஒருவிதமான புதிய தமிழிலிருக்கும் 'புதிய ஏற்பாடு'ஐ எனக்குப் பரிசாக வழங்கி தினம் ஒரு அதிகாரம் வாசிக்கச் சொல்லி, உலக மதங்களின் உயர் கருத்துக்கள் எல்லாம் ஒன்றையே போதிக்கின்றன என்று தாத்தா சொன்னார்கள். Thou, Thee, walketh, maketh என்று பைபிள் ஆங்கிலமும் அப்படித்தான் இருக்கும்.

தாத்தாவின் YSS பாடங்கள் குறித்தும் அப்பியாசங்கள் குறித்தும் அறிமுகம் நேர்ந்தது இந்த காலகட்டத்தில்தான். அதில் வரும் குட்டிக் கதைகள் எனக்கும் walking போகும் போது சொல்வார்கள். குழந்தைக்கு செரிமானம் ஆக வேண்டுமென பக்குவமாய் சாதம் குழைய வைத்துத் தரும் அன்னை போல, மிக ஆழமான கருத்துக்களை எல்லாம் எளிதில் ஜீரணிக்கக் கூடிய விதத்தில் வழங்கிய தனிப்பெருங்கருணை தாத்தாவுடையது. தாடித் தாத்தாவின் குடில் ஒன்று இருந்தது அப்போது இன்றைய வெங்கட்ராமன் நகர் இருக்கும் இடத்தில். செல்வ நிலையத்திற்கும் கீழக்குயில்குடி ரோட்டிற்கும் இடையில் இருந்த ஒரு கண்மாய் நோக்கிப் போகும் வழியில் சுற்றிலும் பூச்செடிகள் அமைத்து நடுவில் இருக்கும் அந்தக் குடில். அங்கே அமர்ந்து ஏதேதோ ஹிந்தி பண்டிட் பேசுவதை எல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டு விட்டு, எங்கள் நடை தொடரும் பொழுதில் இந்தப் பேச்சுக்கள் தொடரும். "நேற்று எங்க நிறுத்தினோம் சொல்லு பார்க்கலாம்?" என்று கேட்டு எனக்கு என்ன புரிந்திருக்கிறது என்று recap கேட்டு விட்டு தொடர்வார்கள்.

அப்படி ஒருநாள் மாலைநேர நடையின் போது மேலக்குயில்குடி சாலையில் நடந்து கொண்டே பைபிளில் படித்தது குறித்து "யாரவது அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுவது எல்லாம் எப்படித் தாத்தா முடியும்?" என்றதற்கு, அங்குள்ள சர்ச் அருகே புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு, அஹிம்சையின் பலத்தை, அஹிம்சைக்குத் தான் உச்சகட்ட மனபலமும், ஆன்ம பலமும் தேவையென்பதையும் விவரித்து, காந்தியின் சத்தியாக்கிரகத்தின் சக்தியை விளக்கினார்கள்.

நேதாஜி என்ற தன்னிகரற்ற தலைவருடன் நேரடி களவீரராக கடமையாற்றிய தாத்தாவிடம் இருந்து, காந்தியத்தின் ஆணிவேர் பாடங்கள் குறித்து அறிந்தேன். காந்தியையும், நேருவையும், சுபாஷ் சந்திர போஸையும் காழ்ப்புணர்ச்சி கொண்ட இன்றைய தலைவர்களோடு ஒப்பிட்டு, எத்தனையோ சதித்திட்டங்கள் குறித்த செய்திகள் இன்று ஊடகங்களில் வலம் வருகின்றன. அன்று களத்திலிருந்த வீரர்களுக்கு, இவர்களெல்லாம் தேசவிடுதலை என்னும் மாபெரும் இலக்கிற்கு அடிகோலிய ஆதர்ச மூர்த்திகள். கருத்துக்களில் வழிமுறைகளில் பேதங்கள் இருப்பினும், அன்றைய மனங்களில் தலைவர்கள் குறித்த, அவர்களின் கீழ்மையான உள்நோக்கங்கள் குறித்த அனுமான விமர்சனங்கள் இல்லை.

மீண்டும் மறுகன்ன விவாதம்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்ற குறளையும் அடிக்கடி தாத்தா குறிப்பிடுவாரகள். அதனையும் சொல்லி அது நடைமுறையில் மிகவும் சாத்தியமான கருத்தே என்று கூறி வாழ்வில் பயன்படுத்திய சில தருணங்களையும் சொன்னார்கள். உடன் பணிபுரிவோர் சில சமயங்களில் கீழான செயல்களில் ஈடுபடும் போதும், நாம் நமது நற்குணங்களில் இருந்து விலகத் தேவை இல்லை, அவர்களுக்கும் நன்மையே செய்து வர நாளடைவில்மனம் திருந்தியதையும் குறிப்பிட்டார்கள். இன்று இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்யும் பொறுமையும், அவர்கள் எக்காரணம் கொண்டேனும் நாணுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லாது போனதோ?

அடுத்த வாரம் பள்ளியில் scriptures போட்டி வைக்க, தாத்தாஉடன் பேசியதெல்லாம் எழுத, முதற்பரிசு scriptures இல். அன்றிலிருந்து இன்று வரை, உயிர் உள்ளளவும்,
"நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே"
என்று அனுதினம் தாத்தாவின் அருளை சொல்லாத நாளில்லை.

எந்த ஒரு செயலும் முயற்சி செய்து பாராது முடியாதென்று சொல்வது தாத்தாவுக்கு அறவே பிடிக்காத விஷயம். ""Success often comes to those who dare and act" - தாத்தா அடிக்கடி அழுத்திச் சொல்லும் வாசகம்.

அனுதினம் அதிகாலை (எனக்கெல்லாம் 5.30 மணிக்கு தான் சுப்ரபாதம்) எழுந்து, குளித்து, கோலமிட்டு, யோகாசனம் செய்வதற்கு அமர வேண்டும். மார்கழி மாதமெனில் பச்சைக் கற்பூரம் மணக்கும் இளம் சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தாத்தாவின் கையில் இருந்து கிடைக்கும். அப்படி ஒரு நாளில் பாலகனான பாலா செய்த தகராறு, "என்னை மட்டும் ஏன் தினமும் குளிக்க சொல்கிறீர்கள்? தாத்தாவெல்லாம் குளிப்பதும் இல்லை பல் துலக்குவதும் இல்லை" என்பது. சூரியனும் காணாது காலைக் கடன் அனைத்தும் தாத்தா முடித்துவிட்டால் பாலா என்ன செய்ய முடியும். நியாயமான கேள்வி. மேலும் தாத்தாவிடம் கற்ற யோகாசன பாடம் எல்லாம் வாசலில் நின்று உரத்த குரலில் பாடம் எடுப்பார் 3 வயது பாலா. திரிகோனாசனம் செய்வதற்கு தாத்தா "கை நேர்கோட்டில் இருக்க வேண்டும், பார்வை மேல்நோக்கி இருக்கும் கையைப் பார்க்க வேண்டும் எனப் பாடம் நடத்த, பாலாவும் அதே போல "எங்க, மேல பாருங்க நேர மேல பாருங்க" என்று சத்தமாய் வாசலில் நின்று குரல் கொடுக்க, தெருவில் போவோர்கள் எல்லாம் மேலே அண்ணாந்து வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வார்கள். தாத்தாவுடன் விதண்டா வாதம் செய்ய உரிமை பெற்ற ஒரே நபர் என்ற பெருமை பாலாவையே சேரும்

முந்தைய பதிவு (7)

அடுத்த பதிவு (9)
smile emoticon

No comments:

Post a Comment