Saturday, January 2, 2016

காற்றில் கலையுமோ சுடுமணல் சுவடுகள்

தொலையதிருக்கத்  தேடல் வேண்டும்

அன்றாடங்களின் அவசர அணிவகுப்புகளில் மிதிபடும் பட்டாம்பூச்சி ரகசியங்கள் எத்தனை எத்தனை!! வாழ்க்கை என்பதே பரபரப்பு என்றாகிவிட, நம் காதுகளில் வாழ்த்துப் பாட வரும் தேவதைகள் மௌனமாய் நம் கவனம்பெறாமல் காத்து நிற்கின்றன.

அப்படி ஒரு பொக்கிஷத்தை தன்னுள் சுமந்து, கண் திறந்து காண்பதற்காய் காத்துக் கிடந்தன சில  இடங்கள் இந்த சிங்கப்பூரில். ஒரு தன்னிகரற்ற தலைவனின் கர்மபூமி; எண்ணிலடங்காத வீர்ரகளை உருவாக்கிப் புடம் போட்ட தர்மபூமி; இந்திய சுதந்திரப் பயிர் விளைய அந்நிய தேசங்களில் நாற்றங்கால் பயிரிடப்பட்ட இடங்கள்.  அந்த மனிதர்கள் அதுவரை வாழ்ந்த, பொருள் தேடும் வாழ்விலிருந்து பொருள் பொதிந்த வாழ்வுக்கு உருமாற்றிய ரசவாத கூடங்கள்.

இதுகாறும் இத்தலங்கள் எங்கேயிருந்தன? 

"நம்முடைய அதிதீவிரமான தேடலை பிரபஞ்ச சக்திகள் நமக்காக நிறைவேற்றி வைக்கும்" என்பது எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள். 

அதற்கிணங்க தாத்தாவின் நூற்றாண்டை முன்னிட்டு எழுதத் தொடங்கிய தொடருக்காய் நினைவோடையிலிருந்து மனவோடைக்கு சுரந்த நினைவுகளின் தடத்தில் பயணிக்கத் தொடங்க, பல முறை படித்த கடிதங்களில் - அதுவரை கவனம் பெறாதிருந்த சில விவரங்கள் கண்ணில் பட்டன. அவற்றுள் முக்கியமானது தாத்தா தங்கியிருந்த ஒரு முகவரி - Syonan, Chancer Lane. 

பினாங் சென்று தாத்தா வாழ்ந்த இடங்களைக் காண வேண்டுமென்ற ஆவலில் தொடங்கிய தேடல் பட்டியலில் இவ்விடத்தையும் குறித்துக் கொண்டேன். 

கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்தில் வழக்கமாய் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கடக்கும் புகிட் திமா பாதையில் 'Chancery Lane' என்ற பலகை கண்ணில் பட, மின்னல் வெட்டியது. அதுவரை தாத்தா மலேயாவில் இருந்த இடங்கள் என்றே இருந்த புதிர்க்கட்டங்களில் ஒன்றுக்கு விடைகிட்டியது. Syonan என்றே அக்காலகட்டங்களில் சிங்கப்பூர் அழைக்கப்பட்டது என்பதும், சிங்கப்பூரும் 1965 வரை மலேசியாவின் பகுதியாகவே விளங்கியது என்பதும் புது வெளிச்சம் போட்டது. அதன் பின்னர் தொடர்ந்து இணைய தேவதையின் தயவால் விளங்கிய கூடுதல் தகவல்  - Indian National Army & Indian Independence League-ன் தலைமையகம் சிங்கப்பூர் Chancery Laneல்தான் இருந்திருக்கிறது என்ற தகவல். 

மலேசியாவின் Pahang கிளையில் IIL ல் பணியாற்றிய தாத்தா பயிற்சி பெற்று சில காலம் சிங்கப்பூரில் பணியாற்றி இருக்கிறார்கள். தாத்தாவின் பயிற்சிக் களமாய் விளங்கிய சிங்கப்பூரில், நேதாஜியின் சக்திபீடமாய் விளங்கிய சிங்கப்பூரில் இத்தனை வருடங்களாய் இருந்தும் இன்றுவரை காணாதிருந்த மறைபொருட்கள் தெரியத் தொடங்கிட, புதிய பார்வையில் தேடல் தொடங்கிட, கடந்த பத்து தினங்களாய் நிகழ்ந்த தொடர் தேடலில் நேதாஜியுடன் நெருக்கமாகப் பணியாற்றிய திரு. S.A.Ayer** என்பவர் எழுதிய "Story of the INA" என்ற புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.

மேலும் Institue of Southeast Asian Studies & Netaji Research Centre வெளியிட்ட சில ஆவணங்களில் இருந்து INA தொர்பான சில முக்கிய நிகழ்வுகளும் அவற்றின் நிகழ்களங்களும் தெரிய வந்தன. ஜப்பானியருக்கு  பயந்து பிரிட்டிஷாரும் பின்னர் பிரிட்டிஷாருக்கு பயந்து ஜப்பானியர்களும் சிலபல தகவல்களை அழித்துவிட, இரண்டாம் உலகப் போர் காலகட்டங்கள் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே எஞ்சின . எனவே 1980களில் நேதாஜி குறித்த தகவல்களைத் திரட்டுவதை ஒரு தனித்திட்டமாக நடத்தி, நேதாஜியின் அமைப்புகளில் நேரிடையாக கலந்து கொண்ட,  பங்கேற்ற, பணிபுரிந்த பலரது நேர்காணலின் மூலம் அவற்றைத் தொகுத்து ஆவணக் காப்பகங்களில் சேர்த்திருக்கிறார்கள். இத்தகைய பலரின் பேட்டிகள், கடிதங்கள், 1940களின் சிங்கப்பூர் வீதிகளின் வரைபடங்கள், கட்டிட வரைபடங்கள், புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் NAS Archivesல்  கிடைக்கின்றன. 

அவற்றையெல்லாம் தொகுத்துக் கொண்டு தொடங்கியது சுதந்திர வேள்வியின் சுடுமணல் பதிந்த INA சுவடுகளைத் தேடும் பயணம்.

முதலில் சென்ற இடம்: Old Ford Motor Factory. 

15 பிப்ரவரி 1942-ல் பிரிட்டிஷ் ஜப்பானியரிடம் சிங்கப்பூரை ஒப்படைத்தது இந்த கட்டிடத்தில்தான்.  

உலகப் போர் குறித்த பல ஆவணங்கள் ஒலி/ஒளிப்பதிவுகள், பழைய போர்க்கால தகவல் தொடர்பு சாதனங்கள், செய்திதாள்கள் எனப் பல பொருட்கள் இங்கே இருக்கின்றன.

அடுத்தது "Chancery Lane". 

பேருந்தில் சென்று இறங்கியதும் காற்று குளிர்ந்து, மழை பொழியத் தொடங்கியது. சிங்கப்பூருக்கே உரிய திடீர் மழை. உடல் சிலிர்த்தது மழைக்காற்றினால் மட்டுமா? வானவர் ஆசீர்வாதமாய், பன்னீர்த் துளிகளாய் மழைத்தூறல் மாறியதும், மெல்ல நடந்து நேதாஜி பாதம் பதிந்த, தாத்தா பாதம் பதிந்த IIL (Indian Independence League - Administrative wing of INA) தலைமையகம் இருந்த வீதியில் நடக்கத் துவங்கினோம்.

Propagandist & Finance Controller ஆக தாத்தா நேதாஜியின் நேரடிப் பார்வையில்  பணிபுரிந்த ஸ்தலம். உடலைத் தழுவிக் கடந்து செல்லும் காற்றில் இன்னும் அந்த மகான்களின் மூச்சுக் காற்று மிச்சம் இருக்குமா? சாலை எங்கும் மழை கழுவிச் சென்று கண்ணாடியாய் பளபளத்தது. INA வீரர்கள் அன்றாடம் காலை ஓட்டப் பயிற்சிக்கு அருகிருக்கும் Dunearn வீதிக்கு  செல்லும் போது இந்தப் பாதையில் பதிந்திருக்கக் கூடிய ஏதோ ஒரு காலடித் தடம் எங்கள் பாதங்களில் பட்டிருக்கக் கூடுமா? 

நேதாஜி பகல் இரவைத் துறந்து 25 மாதங்கள்  சுதந்திர பாரதம் ஒன்றே நினைவாய் வேள்வித்தீ வளர்ந்த Chancery Lane. 'சலோ தில்லி', 'ஜெய்ஹிந்த்' முழக்கங்கள் எங்கிருந்தோ காதுகளில் ஒலித்தது. ஒப்பற்ற தலைவனின் காலடியில் பணிபுரிந்த தினங்களை பெருமிதத்தோடு நெகிழ்ச்சியோடு தாத்தா நினைவு  கூறுவது மனதுள் இன்று நிகழ்ந்தது போல நினைவில் எழ, காற்றில்  மிக அருகில் தாத்தாவின் வாசம். தாத்தாவின் விரல்களைப் பற்றுகையில் உணரும் குளிர் நீரில் குளித்த குளிர்ச்சியும், ரேகைகளில் விபூதி குடியேறிய வாசமும் - 70 வருடமா 30 வருடமா? பின்னோக்கி சென்றது நானா? காலங்கள் கடந்து இன்று முன்னோக்கி வந்து உடன் நிற்கும் எம் தலைவனா? யார் அறியக்கூடும்?? Moments of Emotional high!

மூன்றாவது இடம்: Padang ground.

5 ஜூலை 1943 - Padang மைதானம். INA வீரர்கள் படை அணிவகுத்து நிற்க, சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் வீரவணக்கங்களை ஏற்கிறார். இரண்டு தினங்கள் கழித்து அதே இடத்தில் மாபெரும் பொது மக்கள் திரளுக்கு முன்னால் உணர்ச்சி மிக்க உரை ஆற்றுகிறார். இன்று போல அன்றும் மழை பொழியத் தொடங்குகிறது. யாரோ குடை நீட்டுகிறார்கள் அவர் தலை நனையாதிருக்கும் பொருட்டு. குடையை விலக்கிவிட்டு, இங்கு நிற்கும் எனது அனைத்து INA சகாக்களுக்கும் குடை தர இயலுமா? அவர்களுக்கு நிகழ்வதே எனக்கும் நிகழட்டும் என்று கொட்டும் மழையில் உணர்ச்சி பொங்கும் பேச்சைத் தொடர்கிறார். ஒருவரும் எங்கும் நகரவில்லை.

நனைந்தனர் - உள்ளிருக்கும் ஆன்மாவை தொட்ட பேச்சு மழையில், அவர் பேச்சு எழுப்பிய உணர்ச்சி மழையில், உணர்ச்சி பெருகிய கண்ணீர் மழையில், வான் பொழிந்த மழை யாருக்கும் உரைக்காது அனைவரும் நனைந்தபடி அந்த 3 மணி நேர பேச்சைக் கேட்டனர்.

அதே மைதானம், அவர் நின்ற அதே படிகள். National Art Gallery யாக உருமாறி விட்ட அன்றைய Municipal Office கட்டிடம். தங்கள் உடல்களைப் படிக்கட்டுகள் ஆக்கி நாம் சுதந்திரர்களாய் உலவ வழிவகுக்க முன்வந்த வீரர்கள் நின்ற மைதானத்தில் ஒரு கிரிக்கெட் கிளப் இருக்கிறது இன்று.

நான்காவது இடம்: 61, Meyer Road 
கடற்கரை ஓரம் ஒரு colonial bungalow. அந்த காலகட்டத்தில் நேதாஜி தங்கியிருந்த வீடு. பல முக்கியமான சிந்தனைகள் உருப்பெற்ற இடம், உறக்கத்தை மறந்து விட்டு இரவெல்லாம் தொடர்ச்சியாக அவர் எழுதிய Provisional Government-ன் உறுதிமொழி, அரசாங்கம் நடத்துவதற்கு அவர் தீட்டிய மிக விவரமான திட்டங்கள் கருத்தரித்த இடம். கொதிநிலை தாண்டிய விதி நிலையிலும், பிரச்சனைகளுக்கு இடையேயும்  அமைதி தேடி தியானத்தில் அமர்ந்த வீடு. சில முதிர்ந்த பின்னிரவுகளில் ராமகிருஷ்ணா மிஷன் கோவிலுக்கு(அப்போது நோரிஸ் ரோட்டில் இருந்தது) சென்று தியானத்தில் ஈடுபடுவதும் அவரது வழக்கம். சுபாஷ் அவரது ஆன்ம பலத்தையே அதிகம்  நம்பிய தீவிர ஆன்மிகத் தேடல் நிரம்பிய introvert மனிதர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். எப்போதும் கையில் வைத்திருந்த பகவத் கீதையும், தியானம் முடித்து வெளி வரும் போது உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் அவருக்கு ஏற்படும் அமைதி நிரம்பிய நேர்மறை அதிர்வுகளும் உடன் இருந்தவர்களை அவர் தொடும் போது அவர்களுக்கும் அந்த அமைதி பரவுவதும் S.A.Ayer வார்த்தைகளில் படிக்கும் போது தோன்றிய காட்சிகள் நினைவிலாடியது.

61, மேயர் ரோடு - இன்று வானளாவி நிற்கிறது ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி வளாகம் (condo). உள்ளே குடியிருக்கும்  உங்களில் யாருக்கேனும்  இந்த இடத்தின் அதிர்வுகள் புரிகிறதா? தெரியவில்லை.


இறுதியாக - The Cathay Cinema Hall

உலகப் போர் காலத்தில் INA radio broadcast centre ஆக விளங்கிய, நேதாஜி தலைமையில் தற்காலிக அரசாங்கத்தின் பதவியேற்பை நிகழ்த்தும் பேறு கிட்டிய  The Cathay Cinema Hall.  இன்றும் அந்த Cathay building முன் புறம் நினைவுச் சின்னமாக அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். பின்னால் ஒரு பெரிய வணிக வளாகமும் ஒரு சிறு கண்காட்சியும் இருக்கிறது.


 21 அக்டோபர் 1943 - எள் விழ இடமின்றி நிறைந்திருக்கிறது. நிற்கும் கொள்ளளவும் நிறைந்து வழிகிறது; காற்றில் எதிர்பார்ப்பின் இறுக்கம் நிரம்பி இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் அமைத்து அதன் தலைவராக ஆற்றப்போகும் முதல் பிரகடன உரை. இமைக்கும் ஒலியும் கேட்கக்  கூடிய அமைதி.

நேதாஜி தொடங்குகிறார்:
"கடவுளின் பெயராலும், பாரத தேசத்தை ஒருங்கிணைத்து அதன் உன்னததுக்காக  உழைத்து மறைந்த கடந்து சென்ற தலைமுறைகளின் பெயராலும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் வீரம் செறிந்த  தியாகத்தின் பாரம்பரியத்தின் பெயராலும் - இந்திய மக்களாகிய உங்களை இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு அழைக்கிறோம். இந்திய மண்ணின் இறுதி வெற்றிக்கான இறுதிப் போராட்டம் - கடைசி எதிரியும் வெளியேறும் வரை, இந்தியா சுதந்திர மூச்சை சுவாசிக்கும் வரை, வீரத்துடனும் விடாமுயற்சியுடனும் போராட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அழைப்பு விடுக்கிறோம்"


நீண்ட பிரகடனத்தின் முடிவில் உறுதி மொழி எற்றுக் கொள்ளத்தொடங்கினார். அதுவரை The Cathay hall கண்டதிலேயே பெருமதிப்பிற்கு உரியதும் உன்னதமானதும் ஆன ஒரு காட்சி அங்கே அரங்கேறத் தொடங்கியது.

பலத்த வாழ்துக்களுக்கிடையே நேதாஜி  உறுதிமொழியைத் தொடங்கினார்:  "சுபாஷ் சந்திர போஸ் ஆகிய நான், எனது தேசத்தின் 38 கோடி மக்களின் விடுதலைக்காக கடவுளின் பெயரால் இந்த புனிதமான உறுதி மொழியை எடுக்கிறேன்.  இந்தப் புனிதமான  போரை எனது கடைசி மூச்சு உள்ள வரை.." உணர்ச்சிவயப்பட்ட குரல் நடுங்க அதற்கு மேல் தொடர முடியாமல் உணர்ச்சி மேலிட நிறுத்தினார். கன்னத்தில் கண்ணீர் வடிந்தது; கைக்குட்டையால் கண்ணீரை துடைத்து விட்டு மிகுந்த பிரயாசையுடன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு உறுதிமொழியைத் தொடர்ந்தார்.

உறுதியான குரலில்,
"என்றும் இந்தியத் திருநாட்டின்  38 கோடி சகோதர சகோதரிகளின் நலனுக்காக உழைக்கும் சேவகனாய் இருப்பேன், இதுவே எனது தலையாய கடமையாக இருக்கும் . விடுதலை கிடைத்த பின்னரும் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தைப் பேணும் பொருட்டு எனது இறுதித் துளி இரத்தத்தையும் சிந்துவதற்கு சித்தமாக இருப்பேன்"

முழு உறுதிமொழியும் அவர் எடுத்து முடிக்கையில் அரங்கம் அதிர்கிறது - ஜெய் ஹிந்த்;
கூடி இருந்தோர் உள்ளம் அதிர்கிறது - ஜெய்ஹிந்த்;
ரத்த நாளங்கள் எங்கும் சுதந்திர வேட்கை உணர்ச்சி பாய எல்லோர் நாவிலும் மனதிலும் - ஜெய் ஹிந்த்!!!

- ஜெய் ஹிந்த்!!!-

** Minister for Publicity and Propaganda in Subhas Chandra Bose'sAzad Hind Government between 1943 and 1945 - https://en.wikipedia.org/wiki/S._A._Ayer

புகைப்படத் தொகுப்பு: https://www.facebook.com/media/set/?set=a.10207570163509384.1073741848.1149053476&type=1&l=f0cc46c970

No comments:

Post a Comment