Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 27

Fast forward. எனது கல்லூரி நாட்கள். காலம் எந்தக் கரையிலும் நிற்காத நதி. எதையும் விழுங்கிவிட்டு சுவடின்றிக் கடந்து செல்லும். தாத்தா மறைந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டன. இறுதியாண்டு ப்ராஜெக்ட் புத்தகங்கள் ஆறு பிரதிகள்  சமர்ப்பிக்க வேண்டும். நல்ல அச்சகம் தேடிய போது செக்கானூரணியில் ஒன்று இருப்பதாகவும், செய்யும் வேலை மிகவும் திருத்தமாக இருப்பதாகவும் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். வள்ளியென பெயர் பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி மனதுள். மாடியில் இருந்தது அச்சகம். மேலே படி ஏறிச்சென்று அச்சக உரிமையாளரிடம், எனது ப்ராஜெக்ட் தொடர்பான குறுந்தகடுகளை ஒப்படைத்துவிட்டு, அதன் வடிவமைப்பு குறித்து சில தகவல்களும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அவர் என் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார்.அறையெங்கும்  காகித மணம் - ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் நிற்பது போலிருந்தது. கட்டணச் சீட்டு எழுதுவதற்கு முகவரி கேட்டார்; கூறினேன். எழுதிக் கொண்டிருந்தவர், நான் 'செல்வ நிலையம்' என்றதும், எழுதுவதை நிறுத்தி விட்டு முகத்தைப் பார்த்தார். 'செல்வ நிலையம் தாத்தாவுக்கு நீங்கள்..' என்று இழுத்தார்.. 'அந்தத் தாத்தாவின் முதல் பேத்தி நான்..' என்று முடிப்பதற்கு முன்னதாகவே முகம் மலர்ந்து விட்டது. கீழேயே இணைந்திருந்த தன் வீட்டை நோக்கி மனைவியைப் பெயர் சொல்லி அழைத்தார்.
'உக்காருங்க, அதான் வந்ததுலருந்து பாத்துட்டே இருந்தேன். தெரிஞ்ச முகமா இருக்கேன்னு. நல்லா இருக்கீங்களா? நானும் colonyதான்.' எங்கள் வீடிருக்கும் தெருவின், அடுத்த தெருவின் பெயர் சொல்லி அவர் வளர்ந்த வீட்டின் அடையாளம் சொன்னார். 'என்னோட life,  இந்தக் கடை எல்லாமே நல்லா அமையக் காரணம் உங்க தாத்தாதான்' என்றார் குரல் நெகிழ. அவர் மனைவியும் மேலே வர  'இவங்க யார் தெரியுதா? நம்ம செல்வநிலையம் தாத்தாவின் பேத்தி, final year projectக்கு வந்திருக்காங்க' என்றார். அவர் மனைவியும் முகம் மலர, 'உட்காருப்பா, காபியாவது சாப்பிட்டுத்தான் போகனும்' என்றார்கள். இருவரும் அகமும் முகமும் மலரத் தங்கள் கதையைக் கூறினார்கள்.
தனது பள்ளி நாட்கள் முதலே, தாத்தா தன்னை அவ்வப்போது கல்வி குறித்து விசாரித்ததும் வழிநடத்தியதும் குறித்துக் கூறினார். 'எனக்கு மட்டும் இல்லப்பா, colonyல நிறைய பேருக்கு நல்ல friend,philosopher and guide தாத்தா; எத்தனை நாள் அந்தத் திண்ணையிலும் வேப்பமர நிழலிலும் பேசியிருக்கோம்' - தாத்தாவோடு பேசிய நாட்களின் வேப்பமரக் காற்றின் குளுமை அவருள்ளும் நிறைந்திருந்து பேச்சில் தவழ்ந்தது.
படிப்பு முடிந்து, தனது காதல் திருமணமும் முடிந்து, அவர்கள் இருவர் குடும்பமும் பாராமுகமாய் இருந்த காலம்; பல நாட்கள் colonyக்குள் அவர் வராமல் இருந்த நாட்களில் ஒரு நாள்.  எங்கோ செல்லும் வழியில் தாத்தா அவரை சந்தித்திருக்கிறார்கள். பின்னர் ஒருநாள் காலை வேளை நடையின் போது, அவர் அப்போது தங்கியிருந்த அறைக்குச் சென்று, பல மணித்துளிகள் பேசியிருக்கிறார்கள். அது குறித்து அகம் பொங்கக் கூறினார்.
பல்கலைக்கழகத்துக்கு எதிரில் ஒரு சிறு வீடு பிடித்து Job typing செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவரை சந்தித்து 'இந்த வருமானத்தில் எவ்வளவு நாள் குடும்பம் நடத்த இயலும்? இருவருக்குமான எதிர்காலத் திட்டமென்ன? கையில் காசு இல்லையெனில் எவ்வளவு சிறந்த இல்லறமும் கசந்து போகும், ஏற்கனவே எதிர்ப்பைக் காட்டும் உறவுகள் முன் மேலும் தலை குனிய நேரிடும். உன்னிடம் திறமையும், சிறந்த பண்புகளும், உழைக்கும் உறுதியும் இருக்கிறது. அடுத்தபடி என்ன செய்ய முடியும் என்று முன்னால் நோக்கு' என்று பேசியதை நினைவுகூர்ந்தார். கையிருப்பு நிலை குறித்தும் எதிர்காலக் கனவுகள் இருந்தும், அதில் உள்ள மறை இடர்கள் குறித்தும் தான் மனம் கலங்கியதும், அதற்கு உற்சாகமூட்டி, 'தெளிவான தொலைநோக்கும், குறிக்கோளும் இருக்கும்போது தைரியமாய் அடியெடுத்து வை' எனச் சொல்லி, "Success often comes to those who dare and act" என்று தாத்தா கூறியிருக்கிறார்கள். அந்த நாளே, தன் மீது தாத்தா காட்டிய அந்த நம்பிக்கையே தனது வாழ்வில் முக்கியமான திருப்புமுனை என்று அவர் சொல்லும் போது, அந்த நாளுக்கு அவர் சென்று விட்டதை, பளபளத்த அவர்களது இருவர் விழிகளும் சொல்லியது. பல்கலைக்கழகத்துக்கு எதிரே அந்த சிறிய வீட்டுக்கு ஒருமுறை தாத்தா வந்த போது, உடன் ஒரு சின்னப் பெண் வந்தது நினைவிருக்கிறதா என்று சிரிப்போடு கேட்டேன். 'ஓ அந்த பொண்ணுதான் ப்ராஜெக்ட் செய்ய வந்திருக்கா' என்று அவரும் சிரித்தார்.
அந்த சந்திப்பு, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு காலை நேர நடையில் போன இடம். அன்று எனக்கு ஏதும் பெரிதாய் புரியவில்லை. அன்று அந்த அறை வாசலில் நாற்காலியில் காலை இளம் வெயில் சாய்ந்தாடிக்கொண்டிருந்தது. அதனோடு விளையாடிக் கொண்டிருந்தேன். 
தான் செல்லும் பாதையில், செடி கொடிகளை நாற்றுப் படுகையை தலை தடவிச் செல்லும் தென்றல் போல, வாழும் ஒவ்வொரு நாளும் உடன் வரும் மனிதர்களை ஏதோ ஒரு சிறிய விதத்திலேனும் ஊக்குவித்து, பெரிய பெரிய மாற்றங்களுக்கும் வித்திட்டுக் கொண்டே சென்றிருக்கிறார்கள், யாருக்கும் எந்த விளம்பரமும் இன்றி; எந்தக் கைம்மாறும் பாராட்டும் எதிர்பாராது.
அனிச்சையாய் இது போன்ற அறிமுகமில்லா மனிதர்கள், பல சந்திப்புகளில், 'நாகமலை, வீதியின் பெயர், வேப்பமரம் நிற்கும் வீடு' என்றதும் 'தாத்தாவுக்கு நீங்கள் என்ன உறவு?' என்று கேட்கும் கேள்விகளும், அதைத் தொடர்ந்து தாத்தா அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய நல்ல தாக்கமும் - ரயில் பயணத்தில், கோவில்களில் என எங்கெங்கோ தாத்தாவின் தரிசனம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது; இருக்கிறது. இத்தகைய பிரபல்யத்திற்கு தாத்தாவிடம் அன்று இருந்தது உயர்பதவியோ பெருஞ்செல்வமோ ஆள்பலமோ ஏதுமல்ல. ஒரு மனிதன் அமரத்துவம் பெறுவதற்குத் தேவை வேறொன்று. மனிதம் - சகமனிதர்கள் மீது வைக்கும் அக்கறை, நம்பிக்கை, நேசம். அந்த நேசத்தோடு பிணைத்த உறவுகள் காலம் கடந்தும் உறுதியாய் நிரந்தரமாகின்றன.
சொந்த வாழ்வில் தான் வாழ்ந்த தளத்தில் இருந்து, பல அடிகள் கீழ்மையாய் நடந்து கொண்ட பலரையும் பார்க்க நேர்ந்த போதும், சோதனைகள் மீண்டும் மீண்டும் வந்தபோதும், தாத்தா அந்த தருணத்தில் விசனப்பட்டதுண்டு; எனினும் அதிலேயே உழன்றது இல்லை; ஒட்டுமொத்தமாய் மனிதர்கள் மீது கசப்பாக ஒரு வார்த்தையும் சொல்லாத , எதிர்மறைக் கருத்துகளும் உருவாக்கிக் கொள்ளாத eternal optimism தாத்தாவுடையது. 
'செல்வமில்லையென்று என்னை யாரும் கண்டு கொள்வதில்லை, என்னை யாரும் மதிப்பதே இல்லை' என்பதெல்லாம் தன் மீதான சுய மதிப்பு குறையும் போது பிறர்கருத்துக்கு நாம் கொடுக்கும் அளவு கடந்த முக்கியத்துவமே. உலகே நம்மை மதிக்கவில்லையென, நாமே ஒவ்வொன்றின் முதுகிலும் ஏற்றிப் பார்க்கும் தற்குறிப்பேற்றமே. இதுபோல நம் மனதுள் நாம் நிகழ்த்தும் negative conversations, நம்மை பின்னுக்குத் தள்ளி கீழ்மையுள் உழலச் செய்யும் என்பதே தாத்தாவின் அழுத்தமான கருத்து. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோ, பிறர் குறித்த எதிர்மறைக் கருத்துகளோ, வேடிக்கையாக சொல்வதாகவே இருந்தாலும், அது நமக்குள் விதை ஊன்றி வளரும் தன்மை கொண்ட நச்சு விதை, அதைக் கண்டவுடன் களைந்து விடவேண்டும் என்பதே பலமுறை தாத்தா கூறிய personal கீதை.
உள்ளுக்குள் தன்னை உணர்ந்து உயர்வாய் நின்றிருப்போருக்கு, புற உலகின் அவமதிப்புகளோ சிறுமைகளோ கடந்து செல்லும் பாதையின் முள்ளே; பிடுங்கி எறிந்துவிட்டு முன்னே செல்ல பாதை விரியும் அகலமாய் ராஜபாட்டையாய்;
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா.. அன்பே சிவம் அன்பே சிவம்..


No comments:

Post a Comment