Tuesday, April 5, 2016

சற்குரு - தாத்தா - 30

இந்திய தேசிய ராணுவ நாட்கள்:




ஒவ்வொருவருக்கும் வாழ்வின் உச்சமாக ஒரு காலகட்டம் அமைவதுண்டு. அவ்விதமான தலைசிறந்த நாட்களாய் தாத்தா கருதியது, தன்னிகரற்ற தனிப்பெருந்தலைவர் நேதாஜியுடன் நேரிடையாகப் பணியாற்றிய அந்த நாட்கள். பாரத வரலாற்றின் முகடுகளைத் தொடும் நாட்களில் தன் வாழ்வின் சிகரங்களும் அமைவது எப்பேற்பட்ட கொடுப்பினை!
நேதாஜியின் களப்பணிகளுக்கான நிதி நிர்வாகப் பொறுப்பும், கிழக்காசிய மக்களிடையே சுதந்திர வேட்கையையும் சுதந்திர பாரதத்துக்கு நேதாஜியின் கொள்கைகளையும் எடுத்து இயம்புவதுமான பணி (Finance Controller and Propagandist). என்னே ஒரு உன்னதமான வாய்ப்பு! 

அதன் அருமை பெருமை உணராது, குழந்தை மனதுக்கே உரிய சந்தேகங்களுடன்  -  'அவரை நேரில் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா தாத்தா?' என்ற எனது கேள்விக்கு - பெருமிதம் பொங்க, கை நீட்டும் தொலைவு காட்டி, 'இதோ, இவ்வளவு தொலைவில் அன்றாடம் காலையிலும் மாலையிலும் என்னைக் கடந்து செல்வார். பணி குறித்துப் பேசியதும், கைகுலுக்கியதும், ஊக்கமும் பாராட்டும் பெற்றதும், பலநூறு முறை வீரவணக்கம் செய்ததும் உண்டு' என்று சொல்லும் போது தாத்தா முகத்தில் சுடர் விடும் ஒளி - இன்று போல் கண் முன் நிற்கிறது.

சொந்த வாழ்வின் துயர்களைப் புறம் தள்ளி, தேசத்துக்காக உயிரையும் தரச் சித்தமாக்கப் படைக்களப் பயிற்சி. பர்மா வழியாக தில்லி செல்லப் புறப்பட்ட இரண்டு ரெஜிமெண்டுகளுக்கு அடுத்து, தாத்தா இருந்த படை, களம் காண்பதாய் திட்டம். இந்திய தேசிய ராணுவம் இந்திய பர்மா எல்லையில் நிகழ்த்திய தாக்குதலும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அந்தப் படையை முறியடிக்க ஆங்கிலேய அரசாங்கம் திணறியதும், தக்க சமயத்தில் உதவி தருவதாய் வாக்களித்திருந்த ஜப்பானியப் படைகள் பின்வாங்கியதும், மிகவும் அதீதமான மழைக்குப் பெயர் போன அப்பகுதியில் பருவ மழை அப்போது  தீவிரமடைந்ததும் வரலாறு.
எதிர்பார்த்ததை விட அதிக தினங்கள் நீடித்த முற்றுகையால், படையினருக்கு ஒற்றை வேளை உணவு மட்டுமே எஞ்சிய நிலையிலும், காலரா, மலேரியா, ஜன்னி என நோய்த் தாக்குதல் தொடங்கிய நிலையிலும்,  INA படையின் ஒற்றை வீரனும் பின்வாங்கவோ மனம் தளரவோ இல்லை.

அந்தப் பின்னடைவு வந்த போதிலும் மனம் தளராத நேதாஜி , அடுத்த கட்ட நகர்வுக்குத் திட்டமிடத் தொடங்கினார். ஆங்கிலேயர் விழித்துக் கொண்டு, பர்மா எல்லையை மீண்டும் கைப்பற்றி, ஜப்பான் வசமிருந்த ரங்கூன் நோக்கி முன்னேறினர். ரங்கூனில் அப்போது ஜான்சி ராணி படையுடனும்(லஷ்மி சேகல் மற்றும் ஜானகி என்ற இளம்பெண்கள் தலைமையிலான INA மகளிர் படை) மற்றுமொரு அணியுடனும் தங்கியிருந்த நேதாஜியை பாதுகாப்புக் கருதி, தாய்லாந்து சென்று விடுமாறு அனைவரும் கூறினர்.('அந்தப் பெண்மணி லக்ஷ்மி செகல் போல நீ இருக்க வேண்டும், ஜான்சி ராணி, Joan of Arc என்றெல்லாம் நேதாஜியாலே பாராட்டப் பட்ட பெண் - இது குறித்துப் பேசும் போதெல்லாம் தாத்தா கூறிய மொழிகள். மேலும் அவர் குறித்த தகவல்கள் இந்தப் பதிவில் வாசிக்கலாம் https://www.facebook.com/notes/sfi-students-federation-of-india/dr-capt-lakshmi-sahgal-ina-a-revolutionary-life-of-struggle-sacrifice/429214980455600/)

  

ரங்கூன் எல்லையை சில மைல் தொலைவுகளில் நெருங்கிக் கொண்டிருந்தது ஆங்கிலேயப் படை. ஜப்பானியப் படையும் ரங்கூனில் இருந்து பின்வாங்கத் துவங்கியிருந்தது. ரங்கூனை வெள்ளையர் பிடிக்கையில் சுபாஷ் பிடிபட்டால் எல்லாம் குலைந்து விடுமென அனைவரும் அவரைக் கிளம்பும்படி நிர்பந்தித்தார்கள். சுபாஷ் பயணம் செய்ய விமானம் ஒன்று தருவதாக ஜப்பானியர் கூறினர். தனது படைக்கு நேர்வதே தனக்கும் நேரட்டும் எனக் கூறினார் அந்த உன்னதத் தலைவர். 'சராசரியாக பதினெட்டு வயதே நிரம்பிய மகளிர் படை, சுற்றத்தின் பாதுகாப்புகளை உதறி என் வாக்குறுதியை நம்பிக் களம் இறங்கிய படை, பகைவனை நேருக்கு நேர் முகம்நோக்க கொற்றவையென எழுந்த படை உடனிருக்க எது வரினும் அதை சேர்ந்தே எதிர்கொள்வோம்' என முடிவெடுத்தார்.

வேறு வழியின்றி அனைவரும் ஒப்புக் கொள்ள, தனது படைகளுடன் உலகின் மிக அதீத மழை பொழியும் அடர் காடுகளுக்கு இடையே தொடங்கினார் தாய்லாந்து  நோக்கிய தனது நடைபயணத்தை. பகலெல்லாம் வான்வழித் தாக்குதலுக்குத் தப்பியும் இரவெல்லாம் நடந்தும், அனைவருக்குமான அணிவகுப்பு முறையிலேயே தானும் ஓர் எளிய படை வீரனாய் நடந்து சென்றார் - தலைவன் என்ற சொல்லுக்கே வழிகாட்டிய நேதாஜி. எல்லோருக்கும் ஒரு வேளை அளவு உணவுதான், எனினும் உற்சாகமாய் படையோடு அமர்ந்து, அதே வாழ்வைத் தானும் மேற்கொண்டு தனது அணியை மேலும் உரங்கொள்ளச் செய்தார். மூன்று மணி நேரத்தில் பறந்து செல்ல வாய்ப்பிருந்த போது, மூன்று கடினமான வாரங்கள் படைகளுடன் நடந்து தாய்லாந்து சென்று சேர்ந்தார்.

ஹிரோஷிமா தாக்குதலுக்குப் பின் ஜப்பான் நிலைகுலந்தது; பின்வாங்கியது. தனது INA இளம் படையினரை வான் வழித் தாக்குதல் முறைகளும், விமானத் தொழில் நுட்பமும் கற்க ஜப்பான் அனுப்பியிருந்த நேதாஜி,  'டோக்கியோ பாய்ஸ்' என்றழைக்கப்பட்ட அந்தக் குழுவை பத்திரமாய் மீட்க உத்தரவிட்டுவிட்டு, பாசக் கயிறாய் வந்திறங்கிய விமானத்தில் Saigonலிருந்து முடிவிலியை நோக்கிப் புறப்பட்டார்.

முந்தைய பதிவு (29)

அடுத்த பதிவு (31)

No comments:

Post a Comment