Monday, May 18, 2015

சற்குரு - தாத்தா - 4

தாத்தாவுடனான பயணங்களுக்கும், காலை மாலை நடைகளுக்கும் மேலும் சில பதிவுகள் தேவைப்படும். என் 14வயது வரைதான் தாத்தாவுடன் வாசம் எனினும், மனவாசம் உயிர் உள்ளளவும் .

மேலும் தாத்தாவுடன் இருந்த நாட்களில் பெரும்பகுதி பயணங்களே. நாங்கள்  இருந்த ஊர்களில் இருந்து புது ஊர்களுக்குக் குடிபெயர்தல் அனேகமாய் ஒவ்வொரு வருடமும் நடக்கும்( இல்லையெனில் நான் 11ஆம் வகுப்புக்குள் 10 பள்ளிகளில் படிக்க முடியுமா). அப்பா, புதிய வீட்டு விலாசத்தை வரைபடத்தோடு கடிதத்தில் அனுப்ப, ஓரிரு வாரத்திற்குள் தாத்தா வருவார்கள். இதுவும் பரம்பரை வியாதி என நினைக்கிறேன், புதிய இடங்களின் திசைகளும், திக்குகளும் கிரகித்தல், map வரைதல் -  பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

புதிய ஊரில் நகருலா ஆரம்பமாகும். படிக்கப் போகும் பள்ளி, கோவில்கள், மற்றும் ஊரின் முக்கியமான அலுவலகங்கள், பிறகு ஊரின் குறுக்கும் நெடுக்குமான பல வீதிகள் என நடை தினம் தினம் களைகட்டும்.

'தாராபுரம்' - தாத்தாவுக்கு மிகவும் பிடித்த ஊர். பின்னர் தாத்தாவின் சரித்திரத்தில் நிரந்தரமான இடமும் பெறப்போகும் இந்த எளிமையான ஊர். 1988ல் ஈரோட்டில் இருந்து அப்பாவின் அலுவல் மாற்றத்தால் குடியேறிய ஊர். கிராமிய மணம் முற்றிலும் அகலாத, கொங்கு தேசத்துக்கே உரிய அதிவெள்ளை சுண்ணம் பூசிய சுவர்களும், பசுஞ்சாணம் மெழுகிய தரைகளும்(mosaic  தரையும் தப்ப முடியாது சாணக்குளியலில் இருந்து) கொண்ட அழகிய அமராவதிக்கரை நகர். 

பழைய கால வீடு.  நான்கு புறமும் மாடிகள், அருகிலேயே முருகன் ஆலயம்,  என முதல் பார்வையிலேயே தாத்தாவுக்குப் பிடித்துவிட்டது. ஆதி காலத்து கருப்பு நிற toggle switch இருக்கும். 'அந்தக்காலத்தில் பெருமாள் கோவில் தெருவிலேயே இப்படி சுவிட்சுதான்' - இது அப்பத்தா..
வீட்டுக்கு எதிரே இருந்த radio telecommunication tower  ஓங்கி உலகளந்து நிற்கும். பார்க்கும்போதெல்லாம் 'Aim High, Aim the Highest' என அந்த tower சொல்வதாக தாத்தா சொல்வார்கள். தாத்தாவின் தாரக மந்திரம் இது. அன்றாட வாழ்வியலில் அகத் தூண்டுதல்களைக் (inspirations எளிதோ) கண்டு கொள்வது, வாழ்வை நேர்மறையாய் நடத்துவதற்கு மிகவும் முக்கியம் என இப்போது புரிகிறது. 

முனிசிபாலிட்டியின் சங்கு அதிகாலையில் ஓம் என ஓங்காரமிடும் - இதுவும் தாத்தாவின் பார்வையே. ஊரெங்கும் மரியாதை நிரம்பிய சொல்லாடல் -"ங்க"ஒவ்வொரு சொல்லிலும் இயைபுத் தொடராய் வரும் அனைவருக்கும். ("ஏனுங்கண்ணு உங்க வீட்டுக்கு ஒரம்பரை வந்திருக்காங்கலாட்டு இருக்குதுங்" போன்ற "ங்கத் தமிழ்" அங்கு புழங்கும் இனிய கொங்குத் தமிழ்.    புரியாதவர்கள் கொங்கு நாட்டுத் தமிழ் அகராதி பார்த்துக் கொள்ளவும்.)

ஊருக்குக் குடியேறியவுடன் ஓரிரு மாதங்கள் குடியிருந்த முதல் வீட்டுக்கு  அருகில் ஒரு பெரிய கமலைக் கிணறு (மீண்டும் refer தமிழ் அகராதி) இருந்தது. அந்த வீட்டுக்கு எதனாலோ தாத்தா வரவில்லை. வீடு மிகச் சிறியது - கிணறு வீட்டைப்போல் நான்கைந்து மடங்கு பெரியது. தான் வந்திருந்தால் அங்கு நீச்சல் அடித்திருக்கலாமே என தாத்தா சொல்ல, 'நீச்சல் தெரியுமா உங்களுக்கு?' எனக் கேட்டுவிட்டேன்!! அறியா வயதல்லவா.தெரியாமல் கேட்டுவிட்டேன்.  'தெரியுமாவா? அடப் பைத்தியக்காரப் பிள்ளையே' எனத் தாத்தா மிக வருத்தப்பட்டார்கள்.
அடுத்த முறை மதுரை சென்ற போது நாகமலையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் ஒரு கிணற்றில் நீச்சலடித்தும், மிதந்தும் காட்டினார்கள். "எப்படி!" என ஒரு சிரிப்போடு கரை ஏறினார்கள், பேத்தியின் அறியாமை நீக்கிய சிரிப்போடு.

வைக்கோல்போர் குவிந்த தெருக்களும், நெல் போரடிக்கும்(Bore அல்ல) களங்களும் பார்த்துக் கொண்டே நடக்கும் போது மலரும் நினைவுகளாய் கதை சொல்வார்கள். மதிச்சியமும், மலேயாவும், அம்மையம்பதியும், சிறுமலையும், பசளை  நகரும், பழங்காநத்தமும், மெதுவாய் என் மனதுக்குள் விரியத் தொடங்கியது தாத்தாவின் வார்த்தைகளில்.

பின்னோக்கிய நீரோட்டம் 
தாயினும் பரிந்த தாய்மாமா வீட்டில் இருந்து தாத்தா பள்ளி சென்ற நினைவுகள். தாத்தா, தாத்தாவுக்கு மிகவும் பிரியமான சின்ன மாமா (ஷண்முகம் தாத்தா), மைத்துனன் ஆகப் போகும் மாமன் மகன் (சிதம்பரம் தாத்தா) என மூவரும்  மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு பசளையில் இருந்து மானாமதுரையில் OVC High Schoolக்கு செல்வார்களாம். சின்னத் தாத்தா மிக அருமையாக வண்டி ஓட்டுவார்கள் என விவரிக்கத் தொடங்கும் போதே தாத்தா கண்களில் ஜல் ஜல் என வண்டி ஓடும். பள்ளி இடைவேளைகளில் மாட்டுக்கு வைக்கோல் போடும் பணி வேறு. தாத்தா சொல்லக் கேட்கும்பொழுதே ஆசையாக இருக்கும் நாமும் அந்த வண்டியில் போகவில்லையே என. அது புரிந்தது போல உடனே சொல்வார்கள். சாலை இப்போது இருப்பது போன்ற நல்ல தார் சாலை கிடையாது, கல்லும் கரடுமாக 'ணங்'கென்று வழியெல்லாம் தலையில் அடித்துக் கொண்டே வண்டியில் பயணம், அதுவும் உற்சாகமாகத் தானிருக்கும் என.

நடையில் தொடங்கிய கதை சில நாட்கள் வீடு வரை தொடரும், வீட்டில் இருக்கும்போது பசளைக்  கதை ஆரம்பித்து விட்டால் அப்பத்தாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடும். உலகையே ஆளும் சக்தியே ஆயினும் பிறந்தவீட்டுப் பெருமையில் மயங்காத மங்கையருண்டோ.  அதுவும்  தன் சித்தப்பூ குறித்த நினைவுகளில் திளைத்தால் மிக நல்ல "mood"இல் வந்து விடுவார்கள் அப்பத்தா. தெரிந்தேதான் பல முறை தாத்தா இந்தக் கதை சொன்னார்களோ!?

பசளையில் ஒரே அலமாரியின் மூன்று தட்டுகள் தாத்தாக்கள் மூவருக்கும் புத்தகங்கள் வைத்துக்கொள்ள இருக்குமாம். மேல் தட்டு சின்னத் தாத்தாவுக்கும், நடுத்தட்டு சிதம்பரம் தாத்தாவுக்கும், கீழ்த்தட்டு தாத்தாவுக்குமானது. மிக நேர்த்தியாக மேல் தட்டும் கீழ் தட்டும் இருக்குமாம், நடுத்தட்டு மட்டும் புத்தகங்கள் கலைந்து கிடக்க, கதவைத் திறந்தவுடன் புத்தகங்கள் கீழே கொட்டுமாம். அண்ணனைக் குறித்துக் கேட்டும் கேட்காதது போல அப்பத்தா கையில் இருக்கும் வேலையை கவனிப்பார்கள் :)
தாத்தாவுக்கும் அப்பத்தாவுக்குமான அந்த interactions எல்லாம் அப்போது புரியவில்லை :)

பின்னர் சின்னத் தாத்தா படிப்பு முடிந்து, சிதம்பரம் தாத்தாவுக்கும் சைக்கிள் வாங்கிய பின்னர், அம்மையநாயக்கனூரில் இருந்து தன்னுடைய சைக்கிளை பசளைக்குக்  கொண்டு வருவதற்கு தாத்தா, அம்மையநாயக்கனூரில் இருந்து மதுரைக்கும்,  மதுரையில் இருந்து பசளைக்கும் சைக்கிளை ஓட்டிக் கொண்டே வந்தார்களாம். இதைக் கேட்டபோதுஅந்த மலைக்க வைக்கும் சைக்கிள் பயணமும் தொலைவும்(ஏறத்தாழ 90கி.மீ ) புரியவில்லை எனக்கு. நானோ சைக்கிள் ஓட்ட பயந்து நாட்களைக் கடத்திக் கொண்டிருந்த காலம் அது. இப்போது சிந்தித்தால் அடேயப்பா என்று இருக்கிறது.

உழைப்புக்கும் வியர்வைக்கும் அஞ்சாத மேன்மக்கள்.

முந்தைய பதிவு (3)

அடுத்த பதிவு (5)

No comments:

Post a Comment