Wednesday, May 20, 2015

சற்குரு - தாத்தா - 5

சற்குரு - தாத்தா - 5

பள்ளிப் பருவத்தில் விடுமுறைகள் மிகவும் விருப்பமானவை. பள்ளிநாட்களினும் அதிகமான கற்றலுக்குரியவை. ஒவ்வொரு தேர்வுக்கு முன்னரும் கச்சிதமாக திட்டமிடப்படும் - பரீட்சைக்கு மட்டுமல்ல.. ஊருக்கு என்று புறப்பாடு என. சகோதரியரைப் பார்க்கப் போகும் ஆவல் ஒருபுறம்; தாத்தாவுடன் கழிக்கப்போகும் நாட்களைக் குறித்த திட்டங்கள் ஒருபுறம்; அதனினும் மேலாக - தாத்தாவுடனான பயணத்தின் பரவசம். நினைவுகளில் சுகம்காணும் flashback தரும் பரவசமல்ல. அன்றே அவ்வண்ணம்தான்.

பயணங்களில் எப்போதும் மனம் ஒரு விரைவையும் சீரான ஒழுங்கையும் அடைந்து விடுகிறது. படிப்பு, வேலைவாய்ப்புகள், தேச முன்னேற்றத் திட்டங்கள் தொடங்கி, வழியில் இருக்கும் ஊர்களின் வளங்கள் அல்லது இன்மை குறித்தும், அங்கு என்னென்ன செய்ய இயலும் என்பது குறித்தும் பேசிய திருநெல்வேலி-மதுரை நெடுஞ்சாலை, காற்றின் வெப்பத்தோடு நினைவுக்கு வருகிறது.

வீட்டில் பயணம் தொடங்கிய நொடியிலிருந்து, பரவசம் ஆரம்பம். பேருந்தில் முதல் இருக்கை, ஓட்டுநருக்கு இணையாக இடப்புறம் இருக்கும் இரட்டை இருக்கைதான் தாத்தாவுக்குப் பிரியமானது. அதற்காக ஒரு பேருந்தை விட்டுவிட்டு அடுத்ததில் ஏறியதும் உண்டு. பேருந்து என்றால் செயற்கைக் குளிரிலும், முழுவதும் திறக்கவியலாத மூச்சுமுட்டும் கருப்பு ஜன்னலும் கொண்ட இன்றைய சொகுசுப் பேருந்தல்ல. காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட அரசுப் பேருந்துகள்.  கடகட சத்தமும் சந்தமாய்த் தானிருந்தது.

பயணங்களில் தாத்தாவும் மிக உற்சாகமாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். ஒரு பயணத்தை என்றுமே ஆவலோடுதான் எதிர்நோக்குவார்கள். அரசாங்கம், சுதந்திரப் போராட்ட தியாகிகள் அதிகநாள் இருக்கப்போவதில்லை என்ற தைரியத்தில் அளித்த  bus passஐத் தான் அதிகம் பயன்படுத்திவிட்டதாக சொல்வார்கள். தாத்தாவின் ஸ்பரிசத்தில் வழவழப்பேறிய அந்த பயண உரிமச் சீட்டு:


பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் நடத்துநர் அணைத்து பயணச்சீட்டு/சில்லறை பரிவர்த்தனைகளை முடித்துக் கொண்டு, முன்னால் வந்து அமர்ந்ததும் தாத்தா மெதுவாக நடத்துநருடன் பேச்சைத் தொடங்குவார்கள்.

சிறிது பேச வாய்ப்புக் கிடைத்ததுமே, தன்னையும் தனது கருத்துக்களையுமே முன்வைத்து சக மனிதர்களுக்கு சங்கடமான மனநிலையைத் தோற்றுவிக்கும் பலரையும் இன்று நாம் காண்கிறோம். மென்மையான நல்லியல்புகள் கொண்ட மனிதர்கள் அரிதாகி, சுயசரிதமும் சுயவிளம்பரமுமே இன்றைய உரையாடல்களின், so-called கருத்துப் பரிமாற்றாங்களின் நிலை. அதனால் அடுத்த மனிதரிடம் பேசும் ஆர்வமும் குறைந்து வருகிறது.

இன்முகத்தோடு இயல்பான உரையாடல்களைத் தொடக்கி, அவர்கள் மெதுவாக தாத்தாவால் வசீகரிக்கப்பட்டு தன்மையாகப் பேச்சைத் தொடரத் தாமாக விழையும் வேதியியல் மாற்றத்தைப் பலமுறை அருகிருந்து கண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் தாத்தாவுடன் மிக நெருக்கமாகிவிடுவார்கள். வழியில் தேநீருக்காக நிறுத்துமிடத்தில் இன்னும் மனம் திறப்பார்கள்.

இதற்கு மிக முக்கியமான காரணியாக இன்று உணர்வது, அந்த உரையாடல்களின் உள்ளடக்கம். எதிரில் இருக்கும் மனிதர்மேல் உண்மையான அக்கறையோடு, அவர்களது பணியின் சிரமங்களையும், சிறப்பான தருணங்களையும், தொடும் தாத்தாவின் பேச்சு. அவர்களது அன்றாடங்களின் வலிகளை பயங்களை அறிந்து சில வழிகளையும் திறப்பார்கள். பேருந்து ஓட்டுவதில் என்ன சிறப்பான தருணங்கள் இருக்க முடியும் என யாரேனும் எண்ணினால், உங்களுக்கும் ஒரு சிறப்பான சற்குருவும், குருவுடனான பயணங்களும் அமைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

எந்த வேலையும் உயர்வுதாழ்வில்லை என்பதும், ஊதியம் ஐந்திலக்க மந்திரமல்ல - ஈதலும் இசைபட வாழ்தலும் என வாழ்ந்து காட்டிய மகான் அனைவருக்கும் குழந்தைப் பருவத்தில் அமையட்டும். பதநீர் விற்பவரும் பூ விற்பவரும் நெருக்கமாகி விடும் ஆன்மாவின் 'கட்டிப்பிடி' வைத்தியம் அது.
"கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த
 பின்னர் கோவணமும் கூட வருமோ?"

பேருந்தை எங்கே நிறுத்தினேன். ஹாங்.. தேநீர் விடுதியில்...P.S.S  Bus Companyஇன் அனுபவங்களோடு சேர்த்து மிக ஆத்மார்த்தமாக அணுகும் அந்த முறை - அந்த உரையாடல்களின் சத்தியம் அந்த நெருக்கத்தை சாத்தியமாக்கிற்று.
இன்று 'எதிராளியின்( note the point சகமனிதர் அல்ல) மனதை தன்வயப்படுத்த அவனுக்குப் அணுக்கமானவற்றை அடையாளம் கண்டுகொள்' என இன்றைய corporate உலகில் 'Influencing Skills'  என்ற புட்டியில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.  Expiry date தாண்டிய இது போன்ற மருந்துகளே நோயின் ஆரம்பம்.

ஒருவழியாய் இறங்கும் இடம் வரும் போது மிக மரியாதையோடு, இருவரும் வழியனுப்பி வைப்பார்கள். சில ஊர்களில், பேருந்துகள் நிற்காத இடங்களில், பேருந்து நிறுத்தம் அருகில்லாத இடங்களில், நாங்கள் செல்ல வேண்டியிருப்பின், முடிந்த அளவு நெருங்கிய இடத்தில் இறக்கிச் செல்லும் தோழர்கள் கிடைத்திருப்பார்கள் தாத்தாவுக்கு.

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
மனம்…. மனம்…. அது கோவில் ஆகலாம்…

முந்தைய பதிவு (4)

அடுத்த பதிவு (6)

No comments:

Post a Comment