Monday, May 25, 2015

சற்குரு - தாத்தா - 6

"கல்லாய் மரமாய் காடு மேடாக

மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்

மாற்றம் எனது மானுட தத்துவம்

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்

எவ்வவை நன்மை எவ்வவை தீமை

என்பது அறிந்தே ஏகும் என் சாலை"


மாற்றம் ஒன்றே மாறாததென்னும் மகத்தான உண்மை மனதில் பதிய சில பாடங்கள் தேவை. மாற்றங்கள் இன்றி வளர்ச்சியும் இல்லை. பழம் விட்டேகும் விதை, மண் புதைய, இருள் பழக, ஒளி தேடி உயிர் நாடி நிலம் கிழிக்க, ஒளி பருக, இலைக்க, துளிர்க்க, எருமை சிறுவீடு மேய்த்தது போக மீண்டும் துளிர்க்க எத்தனை எத்தனை மாற்றங்களை எதிர்கொள்கிறது.


இருள் பழகிய கண்கள் வெளிச்சம் காணக் கூசுவதுபோல், பழகியவற்றினிலிருந்து விடுபட, அது பாழிருள் விட்டு விடுதலையே ஆயினும், மனம் கூசுவதுண்டு. 'தத்தியது போதும் பற' என நம் சுகவெளி(comfort zone இப்படி சொல்லலாமா?) தாண்ட, தாய்ப்பறவையின் கரிசனத்தோடு, தந்தையின் வழிகாட்டுதலோடு, தெய்வத்தின் அருளோடு கூடிய ஒரு குருவின் உந்துதல் தேவைப்படுகிறது.


வளர்ந்த சூழலின் மாற்றங்கள், வருடந்தோறும் பள்ளிகளின், நண்பர்களின், ஆசிரியர்களின் மாற்றங்கள், அவ்வவ்வயதுக்குரிய அகமாற்றங்கள், என அனைத்திலும் துணை நின்றது தாத்தாவின் கரங்கள். தாராபுர வாழ்க்கை, சுகமான தாளகதியில் சென்று கொண்டிருந்த ரயில் ஆற்றுப்பாலம் தாண்டுவது போல் கல்கத்தாவிற்கு இடமாற்றம் என கடகடத்தது. முதலில் அப்பா செல்வதென்றும், காலாண்டுத் தேர்வு முடிந்தபின் நாங்கள் செல்வதென்றும் திட்டம். எங்கள் காலை மாலை நடைகளில், நேதாஜியும், விவேகானந்தரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும், தாகூரும் உடன்வந்தார்கள். ஆன்மிகமாயினும், கலைகளாயினும், விடுதலை வேட்கையாயினும், வீரியமான விதைகளுக்கான நிலம், கங்கையின் ஆரவாரத் தழுவலில் கசடுகள் அணைத்தும் களைந்த நகரம் என,  தாத்தா கல்கத்தாவின் நீள அகலம் முதற்கொண்டு விவரித்தார்கள்.  தாத்தாவும் நானும் ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத், கேதார்நாத் கோடை விடுமுறையில் சென்று வரலாமென்று திட்டம் வேறு. அதற்குள் அரசாங்கம் வாக்களித்திருந்த ரயில்வே பயண உரிமமும் வந்துவிடுமென்று எதிர்பார்த்தார்கள் தாத்தா. அதன் பின்னரும் இறுதி வரை அந்த உரிமம் வரவேயில்லை.


ரகுதாத்தா ஹிந்தியும் அறியாத என்னிடம் "மொழி ஒரு தடையில்லை, ஆறு மாதங்களில் உன்னை ஹிந்தியில் பாண்டித்யம் பெறச் செய்வது என் பொறுப்பு" என உத்வேகத்தோடு என்னைத் தயார்படுத்தத் தொடங்கினார்கள். "உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம்" என்ற சிவ(வாஜி) நகைப்போடு, பாங்க் அப்பாவை அஸ்ஸாம்-க்கு மாற்றியது. குவஹாட்டிக்கு இடமாற்றம் என்ற தகவலோடு இன்னும் பரபரப்பாகியது வீடு. கேந்த்ரிய வித்யாலயா அனைத்து பெரிய ஊர்களிலும் இருக்கும், எனவே பள்ளி குறித்து கவலையில்லை; உணவு குறித்த கவலையோ என்றுமே எனக்கில்லை, அத்தை குறிப்பிட்டது போல நாவுக்கு அடிமையாகாதிருப்பது குறித்தும், கிடைப்பதை ரசித்து வாழ்வது குறித்தும் தாத்தாவிடம் பாடம் நடந்தது.


திருவிளையாடல் மேலும் தொடர்ந்தது. குவஹாட்டி கொடுத்த காலடி மண் பிடிமானமும் நகர்ந்து, சாருப்பேட்டா என்ற ஒரு குக்கிராமத்திற்கு மாற்றலாகியது. அதற்குள் இங்கு எனக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியது. விடுமுறையின் எழுதப்படாத விதியான அனைத்து வினாத்தாள்களையும் choice விடாமல் எழுதிக் கொண்டு வரச்சொல்லியிருந்தார்கள். விடுமுறை முடிந்ததும் இந்தப் பள்ளிக்கூடம் போகப்போவதில்லை என்று அதிஉற்சாகமாய் கழிந்தது விடுமுறை. ஊருக்கு எங்கும் செல்லவில்லை, புதிய மாநிலம் காணப் போகும் பரபரப்பில் கழிந்தது நாட்கள் தாத்தாவுடன். பள்ளி திறக்க இரு நாட்களே எஞ்சியிருக்கையில் ஒருநாள் அதிகாலையில் வந்து சேர்ந்தார்கள் அப்பா அஸ்ஸாமிலிருந்து.


மாற்றத்தின் புதிய இடி என் தலையில் இறங்கியது. ஒரு பாடத்திலும் ஒரு வினாத்தாளுமே எழுதாத நிலையில் அப்பா திடீரென்று வந்து 'எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை, அஸ்ஸாமில் காலம் தள்ள முடியாது' என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்பா வேலையை விடுவது அவ்வயதின் பெரிய அதிர்ச்சியாய் இல்லை எனக்கு, நான் ஏழு வினாத்தாள் எழுதவேண்டுமே என அழத் தொடங்கினேன்.


'பைத்தியக்கார பயபிள்ளை' என அப்பாவுக்கும் நற்பெயர் பெற்றுத் தந்தேன் தாத்தாவிடம். "தேர்வில் ஒவ்வொரு தாளும் இரண்டு மணிநேரத்தில்தானே எழுதுகிறாய். 7 paper எழுத 2 நாட்கள் போதாதா"எனக் கேட்டு எழுத வைத்தார்கள். கூடவே அமர்ந்து புத்தகத்தில் இல்லாத விடையெல்லாமும் எழுத வைத்தார்கள் தாத்தா!!


பின்னர் சில மாதங்கள், அப்பாவுக்குத் தூத்துக்குடி என்று முடிவாகும் வரை சிறிது குழப்பம் நீடிக்க, நான் தாத்தா அப்பத்தாவுடன் மதுரையில் இருந்து கல்வியைத் தொடர்வதென்று தீர்மானமாயிற்று. 

அரையிறுதித் தேர்வும் எழுதாமலேயே மதுரை பயணமானோம். அதற்கு என் புத்தகங்களையும் உடைகளையும் அடுக்கி, தாத்தா தயார் செய்த நேர்த்தியைக் கண்டே ஆய கலைகள் 64இல் packingஉம் ஒன்றென்று உணர்ந்தேன்.


நுழைவுத் தேர்வின்றி அனுமதி இல்லை, அரையிறுதித் தேர்வு தாண்டி இடம் கேட்பதால் மீண்டும் ஐந்தாம் வகுப்பே மீண்டும் படிக்க வேண்டும் என்றெல்லாம் பள்ளிகள் மிரட்ட, தாத்தா என் கல்வியைத் தன் கையில் எடுத்தார்கள். பள்ளியில் இடமே கிடைக்காவிட்டாலும் நட்டம் ஏதுமில்லை, தனியாக வகுப்புகள் எடுத்துக் கொண்டே கூட பத்தாம் வகுப்புத் தேர்வே கூட எழுதலாம்  என்றெல்லாம் தாத்தா சொல்ல, ஒரே திகில் எனக்குள். பள்ளி செல்லாமல் வாழ்வதெப்படி என திகைத்தே போனேன். ஆனால் எந்தப் பள்ளியும் கற்றுத் தரமுடியாத தரத்தில் என் கணிதமும், ஆங்கிலமும் தாத்தாவின் நேரடிப் பார்வையில் மெருகேறியது. Wren and Martin முழுவதும் உள்ளே சென்றது. ICSE கணிதப் புத்தகம் ஒன்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்து பாடம் எடுத்தார்கள் தாத்தா. மேற்படிப்புக்குத் தான் அருகில் இருக்கப் போவதில்லை என்று முன்னரே உணர்ந்தது போல ஐந்தாண்டுகளுக்கு முன்கூட்டிய பாடத்திட்டம் வரை நடத்திய தீர்க்கதரிசி - என் மார்க்கதரிசி.


சிலை மெருகேற செய்ய வேண்டியதெல்லாம் சிற்பியின் கையில் முழுமையாய் சரண்புகுவதொன்றே. உளியெடுக்கும் சிற்பிக்குத் தெரியும் எதை நீக்கி, எதை உடைத்து உள்ளுறங்கும் கருப்பொருளை வெளிக்கொணர்வதென. 

உளிதாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்..

முந்தைய பதிவு (5)

அடுத்த பதிவு (7)

No comments:

Post a Comment