Saturday, September 26, 2015

சற்குரு - தாத்தா - 16

சற்குரு - தாத்தா - 16

பிஞ்சு விரல் பதித்த கடிதம்கண்டு, அடக்கி வைத்திருந்த நேசம் வெடித்துக் கிளம்ப, 'இன்னைக்கு கப்பல் ஒன்று கிளம்புது சென்னைக்கு, இன்னைக்கே கிளம்புறேன்' என்று தாத்தா செட்டியாரிடம் அனுமதி கேட்க, 'நிலவரம் சரியில்லை.. யுத்தம் ஆரம்பிச்சுடுச்சு. இந்த சூழ்நிலைல கப்பல் போக்குவரத்து பாதுகாப்பானதல்ல' என்று அவர் மறுத்துவிட்டார். துக்கம், கோபம், ஆதங்கம், ஏக்கம் மாற்றி மாற்றி பந்தாட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணுறக்கம் தொலைந்த இரவு. 'செட்டியார் ஒத்துக்கொண்டிருந்தால் இந்நேரம் கப்பல் ஏறியிருக்கலாம், இந்நேரம் தாய்மண் நோக்கி பயணம் தொடங்கியிருக்கலாம். பத்துநாட்களில் பெற்ற இளம் மகவு முகம் பார்த்திருக்கலாம். " - அனைத்தையும் கெடுத்து விட்ட முதலாளி மேல் அளவு கடந்த கோபம். உடன் பணிபுரிந்த தோழர்கள் சமாதானப் படுத்தினார்கள்- 'அடுத்த கப்பல்ல போயிடலாம் அண்ணே, கலங்காதீங்க'  என்று. 'ஆமாம்..இது என்ன வாழ்வு, அடுத்த கப்பலில் ஏறிவிட வேண்டும், யார் தடுத்தாலும் சரி..' புயலில் கடையுண்ட கடலாய் மனது. அழுதழுது கண்களில் சிவப்பேற விடிந்தது காலை.

மதிய வேளையில் வந்ததோர் சேதி. தாத்தா பயணம் செய்வதாயிருந்த கப்பல் மீது நடுக்கடலில் குண்டுவீச்சு. கப்பல் மூழ்கி பயணம் செய்த அனைவரும் மரணம். செய்தி கேட்டு வெகுநேரம் உடலும் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. வெற்று செய்தியாய் காதில் விழுந்துகொண்டிருந்த யுத்தம், அண்டை வீட்டான் போல் அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர் அனைவரும். தெரிந்தவர்கள் சிலரும் பயணப்பட்டிருந்தனர் அந்தக் கப்பலில். அந்த துக்கமும், தான் உயிர் பிழைத்து இன்னும் இருப்பதன் சத்தியமும் நெஞ்சம் உணர, பயணத்தைத் தடுத்தவன் தகப்பனாய்த் தெரிந்தான்.

இடையூறென்பது எப்போதும் கெடுதல் அல்ல - நமக்கு விளங்காத பெரிய ஆடுகளத்தில் நமை பேரிடரிலிருந்து காப்பதற்கும் தடங்கல்கள் நேரிடலாம், என்பதற்கு தாத்தா இதை அடிக்கடி உதாரணமாக சொல்வார்கள்.

அத்தோடு கப்பல் தொடர்பும் நின்று போனது.

முந்தைய பதிவு (15)

அடுத்த பதிவு (17)


No comments:

Post a Comment