Tuesday, October 27, 2015

சற்குரு - தாத்தா - 17

சற்குரு - தாத்தா - 17

இரண்டாம் உலகப் போர் முழுத்தீவிரமடைந்தது.

1941 - 1946 இந்தக் காலகட்டத்தை மூன்று தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது.

1. உலகமெங்கும் பரவிக்கொண்டிருந்த, உயிருக்கு உத்தரவாதமற்ற போர்ச்சூழல், அதில் பதைபதைப்புடன் வாழ்வு, இதற்கிடையே மகாத்மா காந்தி, நேதாஜி போன்ற தலைவர்களின் தலைமையில் விடுதலை வேட்கை கொண்டு சுகவாழ்வைத் துறந்து விடுதலைப் போராட்டக் களமிறங்கிய ஆயிரமாயிரம் இளைஞர் கூட்டம் என்ற உலகளாவிய சமூகச் சூழல்.

2. உற்றார் உறவினரைப் பிரிந்து, இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் இடையறாது தவித்து, இருள் கவிந்திருக்கும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் விழுங்கிவிடுமோ? உயிர் தப்பி ஊர்சேர வழிவகை ஏதும் உண்டா? பிழைத்திருக்கும் நாள்வரை பிழையாதிருப்பேனா? என வினாக்களே வினாடிகளாக தவித்திருந்த புலம்பெயர் மனிதர்களின் வாழ்வு.

3. பெற்ற தாய் தந்தையும், உடன்பிறந்தாரும், கட்டிய மனைவியும், பெற்ற மக்களும் ஒவ்வொரு நாள் விடியலிலும் 'இன்று ஏதேனும் சேதி வாராதா நலமாயிருக்கிறார் என்று, இன்ன தேதியில் வருகிறேன் என்று' என எதிர்பார்த்து, மேற்கே கதிரவனோடு எதிர்பார்ப்பும் மறைய, நாட்களை நரகமெனக் கழித்த உறவுகளின் நிலை.

அனைத்தையும் சுமந்து கொண்டு புவி நித்தம் தன் பயணம் மேற்கொண்டுதானிருந்தது விடியலை நோக்கி..

1941-மலேயா அதிதீவிரமான போர்த்தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த மலேயா மீது ஜப்பானியர் வான்வழித்தாக்குதல் தொடங்கினர்.

மலேயாவின் போர் வரலாற்றில் முக்கியமான தினங்கள் - டிசம்பர் 1941. ஜப்பானியப் படை மலேயாவைக் கைப்பற்றத் தொடங்கியது. கிழக்கு கடற்கரையில் கோட்டாபாருவில்(kota bahru) தொடங்கிய ஜப்பானியர் ஊடுருவல் 11-டிசம்பர் பினாங்கைத் தொட முயற்சித்தது.

நித்தமும் அநித்தியமாகிக் கொண்டிருந்த சூழலிலும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்றாடங்களில் புதிதாய் சேர்ந்திருந்த வாடிக்கை - மரணத்தை எண்ணி பதைத்தவாறு பதுங்கு குழிகளில் உயிரைத் தஞ்சமடைவது.

அந்த டிசம்பர் 1941-ல் 25வயது நிரம்பிய தாத்தாவும்(தாத்தா என்ற சொல் ஏற்படுத்தும் வயதான அகத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளவே வயது குறிப்பிடுகிறேன் - 25 வயதே ஆன அய்யாத்துரை) அவரது நண்பரும் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் சார்ட்டர்ட் வங்கி சென்றிருந்தார்கள். கடைப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வங்கியில் நின்று கொண்டிருந்தார்கள். அபாய சங்கு ஊதிற்று.



முந்தைய பதிவு (16)

அடுத்த பதிவு (18)

No comments:

Post a Comment