Tuesday, December 29, 2015

சற்குரு - தாத்தா - 20

கார் பாலத்தைக் கடந்தது. சில நொடிகளில் வெடிகுண்டு தலை மேல் விழுந்தது போன்ற சத்தம். நெஞ்சம் காதில் படபடக்க நடந்தது என்ன என்று திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாலம் வெடித்துத் தகர்ந்திருந்தது.  மயிரிழையில் உயிர் பிழைத்த பதைபதைப்புடன்  புயல் வேகம் எடுத்தனர். அதே சமயம் அந்த ஆற்றின் ஆறு பாலங்களும் தகர்க்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் பின்தங்கியிருந்தால் வீடு சேர முடியாமல் அக்கரையிலும் சில நொடிகள் பின்தங்கியிருந்தால் உயிர் பிழைக்க முடியாமலும் ஸ்லிம் ஆற்றின் கரையில் இக்கதை முடிந்திருக்கக் கூடும். 

பினாங் நெருங்கிக் கொண்டிருந்தது. பேசிக் கொள்ளவும் முடியாத கலவரத்தில் இருவரும். அப்போது சாலையோரத்தில் ஒரு சக்கரம் அதிவேகமாய் காருக்கு முன்னால் ஓடுவதைப் பார்த்து வியந்.. சரேல் என  சறுக்கி கார் பக்கத்தில் இறங்கி   பாதியில் நின்ற வியப்பை உறுதிப்படுத்தியது - ஆம் அது அவர்களது காரின் சக்கரம்தான். 
விதியையும் வெல்லக்கூடும் வெல்வதாக விதியிருந்தால் - அப்படி பிழைப்பதாய் விதியிருக்கவே அந்நிய நாட்டு வீதியில் விதி முடியாமல் பினாங் சென்று சேர்ந்தனர்.

அதன் பிறகு தொடங்கியது ஓர் இருண்ட காலம். போரின் பேரிரைச்சலில் அனைவரும் மருண்ட காலம். வெள்ளையர் பினாங்கை விட்டு வெளியேறியது அறியாமல் பினாங்கை தாக்கத் துவங்கியது ஜப்பான். அடுத்த நாள் காலை, துறைமுக வணிக நகரமான பினாங்கின் பரபரப்பான காலை நேரம். பொதுமக்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. வழக்கம் போல் மொத்த வியாபாரத்திற்கு கூட்டம் நெரித்துக் கொண்டிருந்தது செட்டியார் வீதிகளிலும் அருகிலிருந்த சைனாடவுன் பகுதிகளிலும். (இன்றைய சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா, சைனா டவுன் போன்றே பினாங்கிலும் இவ்விரு மக்களும் வாழும் இடங்கள் அந்தந்த நாட்டின் அடையாளங்களோடு பினாங்கில் இருந்திருக்கின்றன, இருக்கின்றன.) காற்று வினோதமான பறவை ஒன்றைப் போல் ஒலிக்க, போர் விமானங்கள் வியூகம் அமைத்து வானில் வருவதைப் பார்க்க அனைவரும் வியப்போடு வானத்தைப் பார்த்திருக்கிறார்கள். காதை தீய்ப்பது போன்ற ஒலியுடன் மழை பொழியத் தொடங்கியது - குண்டு மழை. Carpet bombing (படம் இணைக்கபட்டுள்ளது) என்றழைக்கப்படும் தொடர் குண்டுகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சைனாடவுன் பகுதிக்கருகே விழுந்தன.  ரத்தக் களறியாய் சதைப் பிண்டங்களாய் மக்களை  விசிறியடித்துவிட்டு வந்த வேகத்தில் பறந்து சென்றன விமானங்கள்.


வெடிகுண்டு வானில் இருந்து விழும் சத்தம் கேட்டால் அருகில் எங்கோ விழுகிறது; சத்தம் கேட்காவிட்டால் நம் தலைமேல் விழுகிறது - அதை சொல்லவும் உயிரோடு இருக்க மாட்டோம் என்பதெல்லாம் அப்போது உணர்ந்த பாடங்கள்.

ஆட்சி செய்வது ராமனோ ராவணனோ நாம் நம் வயிற்றை கவனிப்போம் என்றிருந்த, உலக அரசியலின் போக்கை சிறிதும் உணரமுடியாது இருந்த சராரசரி மக்களின் தலையில் வீழ்ந்தது பேரிடி. எங்கோ செய்தித்தாள் நிகழ்வாய் இருந்த போர், அயல்நாடுகளில் நடந்த போர், அண்டை வீட்டானாய் நிகழ்ந்த போர் அவர்கள் வீட்டுக்குள் குடியேறி வீட்டையும் தகர்த்து அனைவரையும் வெளியில் இழுத்துப் போட்டு கோரமாய் சிரித்தது.

முந்தைய பதிவு (19)


அடுத்த பதிவு (21)

No comments:

Post a Comment