Monday, April 25, 2016

சற்குரு - தாத்தா - 33

மாமதுரை:

தென்னன் புகழ் பாடும் அழகான தென்மதுரை.
கரும்பும் இளநீரும்  கண்திறந்து மடைபாயும்
கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்
அறுதாள் அறுத்துவர  மறுதாளும் பயிராகும்
அரிதாளின் அடியினிலே ஐங்கலந்தேன் கூடுகட்டும்  
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
யானைகட்டிப் போரடிக்கும்  அழகான தென்மதுரை -

தாத்தாவுக்கு மிகவும் பிடித்த பாடல், பள்ளியில் பாடத்தில் வந்த இந்த நாட்டுப்புறப் பாடலை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்பார்கள் தாத்தா. 


பத்துப் பதினைந்து நாட்கள் வேறு ஊரில் வந்து தங்கிவிட்டால், செல்வ நிலையம் வீடு நினைவில் வந்து விடும். சில சமயம் கனவாகவும் வீடு தாத்தாவுக்கு செய்தி சொல்வதுண்டு; ஒருமுறை கிணற்று உறைக்குள் கூடுகட்டியிருக்கும் சிட்டுக்குருவி கிணற்றில் விழுந்திருப்பதாய் கனவு கண்டு, உடனே போக வேண்டும் என மறுநாளே கிளம்பிப் போனார்கள். அந்த முறை நிஜமாகவே குருவி விழுந்திருந்தது. அப்படி ஒரு மனதோடு உரையாடும் பந்தம் செல்வ நிலையத்தோடு. வேட்டியை மடித்துக் கொண்டு மாடிப் படியிலிருந்து நிழல் தரும் பரண் மேல் தாவி ஏறி வேப்பிலை சருகுகளைப் பெருக்கி அள்ளுவதும், வாசலில் ஒரு கல் இல்லாமல் தென்னந்துடைப்பத்தைக் கொண்டு விரவி எடுப்பதும், கிணற்றடி முழுதும் நீர் இறைத்து ஊற்றி சுத்தம் செய்வதுமாய் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிரம்பியிருக்கும் தாத்தா, வீட்டைப் பழநிமலை சந்நிதியாய் மாற்றி வைத்து, குத்துவிளக்கை பொன்னென ஒளிரச் செய்து, தினந்தோறும் வாசல் மிளிரக் கோலமிட்டு பொலியச் செய்த அப்பத்தா - இருவருடனும் தாராபுரத்தில் இருந்து பயணித்தோம். நினைவிழந்த நிலையிலிருந்த தாத்தாவுடன் அண்ணனும் மாமாவும் உடன்வர மதுரை நோக்கிப் புறப்பட்டோம். 

ஒரு சிலதினங்கள் முன்னர் மாமா தாராபுரம் வந்தபோது தாத்தாவுடன் மிகவும் மனம்திறந்து பேசியிருந்ததை நினைவு கூறியபடி, மிக விரைவாக முடிவை நோக்கி நகரும் நிதர்சனத்தைத் தாளமுடியாமல் மாமாவும், தனது சிறுவயது முதலே தாத்தாவின் குருகுலவாசத்தில், அருகாமையில் இருந்த அண்ணனும் அன்று தாத்தாவை மடியில் சுமந்து வந்து மதுரை சேர்த்தார்கள்.  (சில பந்தங்கள் புறக்கண்களுக்கு விளங்காதது - தாத்தாவின் இறுதி மணித்துளிகளில் உடன்பயணித்த அண்ணனை 20 வருடங்களுக்குப் பிறகு அப்பாவின் இறுதி வினாடிகளிலும் கொண்டு சேர்த்தது விதியா இறையா..)

வரும்வழியில் அம்மை நகரில் செய்தி சொல்ல நுழைந்தால், தொலைவில் நடக்கும் துயர சம்பவத்தின் எதிரொலி போல், சிறு குழந்தையான தங்கைக்கும் ஒருநாளும் நிகழாத வண்ணம் குரங்கால் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
செல்வநிலையம் - உற்றார் உறவினர் குழுமியிருந்தனர்.

மறுநாள் காலையில் மகளென பாசம் கொண்ட மருத்துவர் வந்து நாடி பார்த்து இன்னும் சில நிமிடங்கள்தான் என்று சொல்ல, உறவினர் அனைவரும் குழுமியிருக்க பிரியமான பேத்திகளும் இளைய மகன் மருமகளும் நாகமலையில் கால்பதித்ததும் பறந்தது உயிர்ப்பறவை - ஓம் எனக் குவித்த உதடுகள் வழியாகவா? மேலேறிய விழிகள் வாயிலாகவா? அனைவர் கண் முன்னால் எத்திசையில் கொண்டு சென்றான் விதிக்கிறைவன்.

[தங்கை ஜெயஸ்ரீயின் வாய்மொழியில்:வாழ்வில் நம்மை பாதிக்கும் சிறு வயது நிகழ்வுகள் சில இருக்கும். அது போன்று எனை பாதித்த நிகழ்வு தாத்தாவின் மறைவு. அன்று சனிக்கிழமை தாத்தாவுக்கு உடல் நலமில்லை என செய்தி கிடைத்த போது அப்பா வேலை நிமித்தம் சென்னை சென்றிருக்க, அம்மா தன் பெருமதிப்புற்குரிய மாமாவை எண்ணி கண்கள் கலங்க, என்னையும் தங்கை ரம்யாவையும் அழைத்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை புறப்பட்டார்கள். அப்பாவும் விஷயமறிந்து ஊர் திரும்ப, ஞாயிறு காலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கைபேசி இல்லாத அந்த காலத்தில், ஒரு பேருந்தில் ஏற, அதே பேருந்தில் அப்பாவும் அமர்ந்திருந்தார்கள். வீட்டை நெருங்க நெருங்க உறவினர்கள் நிறைந்த வீடு பதற்றத்தை விளைவித்தது. வீட்டினுள் நுழைந்ததும் தான் அப்பாவுக்கும் எங்களுக்கும் தாத்தா இறைவனடி சேர்ந்த விஷயமே தெரிந்தது. பேரதிர்ச்சியில் உறைந்தழுதோம். எப்போதும் பேத்திகளைக் கண்டதும் மலரும் தாத்தாவின் முகம் அன்று அசைவற்று இருந்தது. தாத்தா இல்லாத செல்வ நிலையம் தன் பொலிவை இழந்தது போல் அனைவரும் உணர்ந்தோம். தாத்தா மறைந்தாலும் இன்றும் நம் மனங்களில், நம் எண்ணங்களின் எழுச்சியில், உயர்ந்த சிந்தனைகளில் உலாவுகிறார்கள். என்ன காரியம் செய்தாலும் "இப்போது மட்டும் தாத்தா இருந்திருந்தால்.." என்ற எண்ணம் மேலோங்கத்தான் செய்கிறது. இறைவன் எமக்களித்த எங்கள் புதல்வனை எங்களது தாத்தாவே வந்து பிறந்ததாக கருதி மனநிறைவடைகிறோம். வாழும் வரை "அய்யாதுரை பிள்ளையின் பேத்தி" என்ற பெருமை ஒன்றே போதும். வாழ்க்கை பல்வேறு திசைகளில் பயணிக்கும் போதும் தாத்தா கற்றுத்தந்த values எப்போதும் வழிகாட்டும். Saluting him. ஜெய்ஹிந்த்..! ]

கூட்டம் கூடி அழுதது. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் தாத்தா செய்த மாயங்களை மாற்றங்களை சொல்லிச் சொல்லி அழுதனர். கடைசியாய் முகம் பார்க்கவும் வர இயலாது போன செல்ல மகளுக்காகவும் அழுதனர். 

ஊரெல்லாம் கூடி உரக்க அழுதாலும் சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டாலும் நீரினில் மூழ்கி மறந்திடும் நினைவல்லவே. ஏனோ கண்கள் வறண்டு மனம் அலையற்றுக் கிடந்தது.

"ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசையறுமின்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்
ஆசை விடவிட ஆனந்தந்தானே" - தாத்தா அடிக்கடி சொல்லும் மற்றொரு பாடல்.

எந்த ஆசையை விட வேண்டும்? இப்படி ஒரு மகானை மீண்டும் காணும் ஆசையையா? மீண்டும் அந்த விரல்கள் பற்றி உலகை வலம் வரும் ஆசையையா?

ஆசை அறுத்து ஆனந்த யாத்திரை புறப்பட்டது.

முந்தைய பதிவு (32)

அடுத்த பதிவு (34)

No comments:

Post a Comment