Wednesday, May 4, 2016

சற்குரு - தாத்தா - 34

1946: கப்பல் போக்குவரத்து துவங்கியது. மிக நீண்ட ஆறு வருடங்கள் கழித்து வந்தது விடியல்.

ஆறு வருடம் கழித்து தாயகம் திரும்பும் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது. சிங்கப்பூர் வந்து பயண உரிமச் சீட்டும் அனுமதிக் கடிதமும் பெற்றுக் கொண்டு கப்பலேறினார்கள் தாத்தா. (காண்க: அனுமதிக் கடித புகைப்படம். இந்த Havelock Roadல் தான் நான் சிங்கப்பூர் வந்ததும் ஒரு மாதம் தங்கியிருந்தேன். தினசரி நாம் நடக்கும் பாதைகளில் ஒளிந்திருக்கும் கடந்தகால நிகழ்வுகள் -  காணக் கண்கள் திறக்கும் வரை கிடைப்பதில்லை அதன் தரிசனம்)

அனுமதிக் கடிதம்



சென்னை துறைமுக அனுமதியும் ஜப்பான் நோட்டுகளும்





மலேயாவிலிருந்து கப்பலில் சென்னை துறைமுகம் நோக்கி ஒரு வாரத்திற்கும் மேற்பட்ட பயணம். கப்பலின் அனைத்துத் தளங்களிலும் உற்சாகம் அலைபுரண்டது.

நீலம்..பச்சை.. கருப்பு என மாறி மாறி மாயம் காட்டியது எல்லையற்ற நீர்வெளி... மேலே அமைதியாய் இருந்தது கடல்பரப்பு. ஒளிந்திருந்தது ஆழமும் அதன்மடியில் கண்ணாமூச்சி ஆடும் அலைவீச்சும்..அன்னையையும் தந்தையையும் உடன்பிறந்தாரையும் உற்றாரையும் மனைவியையும் முகமறியா மகனையும்  காணப்போகும் தருணத்தை எண்ணி எண்ணி ஆனந்த அலையாடும் மனது. கடல் மேல் இரவுகள் - இருள் மீது மேலும் கருமை பூசியது போன்ற காரிருள் கடந்தகாலமாய். எப்போதாவது ஒளிகோபுரமாய் மற்றொரு கப்பல் கடந்து செல்லும் எதிர்கால நம்பிக்கையாய். (தாத்தாவின் காலடிச்சுவடுகள் தேடி கோலாலம்பூர் பினாங் - கப்பல் வழிப் பயணம் சென்ற கடந்த மூன்று நாட்கள், தாத்தா விவரித்த கப்பல் பயணத்தை மனதுள் கொண்டு வந்து நிரப்பியது - look this space next week for further photos and blog on Penang trip)


பயணத்தின் நடுவில் தாத்தாவுக்கு கடும் ஜுரம். உடல் அனலாய்க் கொதித்தது. உணவுண்ணவும் நகர இயலாது, மேல் தளத்திற்கு வரவும் முடியாது உடல்வலியோடு கடும் காய்ச்சலில் தனது அறையில் படுத்திருந்தார்கள்.

ஒருநாள் நண்பகலில் திடீரென மேல்தளத்தில் உற்சாகக் கூக்குரல்களின் ஒலி, கதவு திறந்து வந்த நண்பரோடு அறைக்குள் வந்து நுழைந்தது.  நண்பர் 'அண்ணே மேல வந்து பாருங்க, கரை தெரியுது' என்று உரக்கக் கூவினார். உண்மையாகவே தாயகம் உயிரோடு திரும்பிவிட்டோம் என்று உள்ளம் பொங்கியது. தாத்தா எழ முயன்றார்கள் -  உடல் தள்ளாடியது கடும் சுரத்தினாலும், அலைமோதிய உணர்ச்சியாலும்.

தாத்தாவை அள்ளித் தோளில் சேர்த்துக் கொண்டு தளர்ந்த கால்களோடு துவண்ட தாத்தாவை மேல் தளத்துக்கு கைத்தாங்கலாய் அழைத்து வந்தார் அந்த நண்பர். கடல்காற்று உடலில் மோதி அறைந்தது.  தொலைவில் சென்னைப் பட்டணம் அடிவானில் தெரிந்தது. உணர்ச்சி வெள்ளம் கண் வழியே பாய்ந்தது.

"கடவுளே! என் தாயகம்! உன்னருளாலே நான் உயிரோடு கரை மீள்கிறேன் குறையின்றி, ஊனமின்றி, மனச்சுமைகளின்றி!! இது சத்தியம்! இந்த தருணம் சத்தியம்!! ஆயிரம் முறை மனம் நடித்து பார்த்த ஒத்திகை அல்ல இது."  காய்ச்சலை மீறி உடல் உவகையால் நடுங்கியது.  கப்பலில் எழுந்த ஒலி அலைகளை மீறி வானைத் தொட்டது.

எத்தனை நூறு முறை இதைச் சொல்லும் போதும் தாத்தாவுக்கு உணர்ச்சி மேலிட்டுக் கண்கள் கலங்கும். இப்போதும் விமானம் தரையிறங்க முற்படும்போது ஒவ்வொரு முறையும் மெரீனாவின் அழகிய கடற்கரை கண்களுக்குத்  தெரியும் போது, தாத்தா விவரித்த அந்தக் காட்சி என் கண்முன் விரியும் - I feel as if I was there in the ship on that memorable day.

எம் தலைவனை சுமந்து வந்த அந்தப் பெயர் தெரியாத தோள் கொடுத்த தோழன் யாரோ! அந்த உன்னத தருணங்களிலும் அதற்கு முந்தைய போர்முகங்களிலும் உடனிருந்த நட்புக்கள் எத்தனையோ!! எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்; அனிச்சையாய் மானுடம் மலர்ந்த முகடுகள்!! நிரந்தரமாய் ஆழ் தடம் பதித்து ஒரு மனிதனை வாழ்நாளுக்கும் புடம் போட்ட நெருப்புக் குளியல்கள்!!

எம் தலைவனைக் காத்து தோள்கொடுத்து உளம்சோரும் போது உடனிருந்த பெயர் தெரியாத அத்தனை கருணைகளுக்கும் நட்புகளுக்கும்  உன்னதங்களுக்கும் எமது நன்றி. எங்கோ காற்று வெளியில் நிறைந்திருக்கும் உங்கள் அனைவரது நினைவுகளுக்கும், பெருமூச்சுகளுக்கும், புன்னகைகளுக்கும், எதிர்காலத்தின் -நிகழ்காலத்தின் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!! உங்கள் வலிகள் எங்களுக்கு மேடையமைத்துக் கொடுத்திருக்கின்றன.

அன்றிலிருந்து 70 ஆண்டுகள் கழித்து இன்று விழுது இங்கு நிலம்தொடும் தருணம் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.
சதுப்பு நிலமாயும் நிணமும் கொலையுமாயும் இருந்த சிங்கப்பூர் இன்று  உலகிலேயே சிங்காரமாய்  மயனமைத்த மாய நகராய் செல்வ செழிப்பாய் மாறியிருக்கிறது. பினாங்கும் கோலாலம்பூரும் தடதடக்கும் இரயில்தடத்து அருகில் படபடக்கும் பட்டாம்பூச்சியென, இன்றைய பரபரப்பின் ஊடே எழுபத்தைந்து வருட நினைவுகள் பொதித்துக் காத்திருக்கிறது.

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது.
அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது.

முந்தைய பதிவு (33)

அடுத்த பதிவு (35)

No comments:

Post a Comment